புதன், பிப்ரவரி 11

அப்பாவி அப்புச்சாமி

தன் நண்பனிடம் பீற்றிக்கொண்டிருந்தான் அப்புச்சாமி.

என் மனைவி என்னைக்கண்டாலே பயப்படுவா தெரியுமா!
பகல் முழுவதும் வேலை செய்கிறாளே.. பாவம்னு நான்தான் காலையில் அவளுக்கு டீ போட்டு கொடுத்து எழுப்புவேன். அப்புறம் அவளுக்கு வெந்நீர் வைத்துக்கொடுத்துவிட்டு காய்கறி வெட்ட ஆரம்பித்துவிடுவேன்.

ஓ! அதுசரி.. மனைவிக்காக இதுகூட செய்யக்கூடாதா! என்றான் நண்பன்.

காய்கறி வெட்டியபின் போனால்போகுது என்று சமையலையும் நானே செய்துவிடுவேன். என் சமையலை சாப்பிட்டுதான் அவள் இப்படி அழகா இருக்கிறாள் தெரியுமோ! என்றான் அப்புச்சாமி.

அப்போ உன் மனைவி என்னதான் செய்வாள் என்று அப்பாவியாக கேட்டான் நண்பன்.

அவளுக்கு நிறைய வேலை இருக்கும். அதான் பிள்ளைகளைக்கூட நானே பள்ளிக்கு கிளப்பிவிடுவேன் என்று அப்புச்சாமி கூறினான்.

ஆமா.. உன்னைக்காண்டாலே உன் மனைவி பயப்படுவான்னு சொன்னியே!


ஆமா! என் மனைவி என்னையைக் கண்டாலே பயப்படுவா! அதான் நான் காலையில் எல்லா வேலையும் முடித்துவைத்துவிட்டு உடனே ஆபிஸுக்கு கிளம்பிவிடுவேன். அப்புறம்தான் அவள் எந்திருப்பாள் தெரியுமா?

ஓ! உன் மனைவிக்கு உன்மேல் அவ்வளவு பயமா! என்று ஆச்சரியப்பட்டன் நண்பன், சரி...மாலையிலாவது அவள் வேலை செய்வாளா?


நோ..நோ.. அவள் வேலை செய்து ஏதாவது தப்பாகிவிட்டால் நான் பொல்லாதவனாகிவிடுவேன். அதான் நான் வரும்வரை அவள் எந்த வேலையும் செய்யமாட்டாள். 

ஓஹோ... நீ வந்தப்புறம் செய்வாளோ?

என்ன இப்படி கேட்டுவிட்டாய். நான் வந்தப்புறம் அவள் எதுக்கு வேலை செய்யனும். நானே பார்த்துக்கொள்ள மாட்டேனா!
மாலையில் வந்தபின் பாத்திரம் விளக்கிவைத்துவிட்டு டீ போட்டு கொடுப்பேன். என்னுடைய டீயை ரசித்து குடிப்பாள் தெரியுமா!

அவ்வளவு நல்லா டீ போடுவியோ என்றான் நண்பன்.


பின்ன டீ நல்லாயில்லைனு அவ சொல்லிட்டா பின்ன எப்பவுமே போடமாட்டேன் என்று கோபமாக அப்புச்சாமி சொன்னான்.
இரவு டிபன் நான் நல்லா செய்வேன்னு என் மனைவி அடிக்கடி சொல்வாள். தினமும் விதவிதமா அவளுக்கு சமைத்து கொடுப்பேன். இதுக்காகவே சமையல் குறிப்பு பத்து புத்தகம் வைத்திருக்கிறேன் தெரியுமா! அப்புறம் டிவியில் சமையல் நிகழ்ச்சி போட்டால் தவறாம நான் பார்ப்பேன் என்று அப்புச்சாமி தம்பட்டம் அடித்தான்.

அவன் நண்பனுக்கு சிரிப்பதா அழுவதா எனத்தெரியாமல் முழித்தான்.

நீ சொல்வதைப்பார்த்தால் உன் மனைவி உனக்கு பயப்படுற மாதிரி தெரியலையே.
பயங்கரமா பயப்படுவா..! அதான் இரவுகூட அவ என்கூட தூங்க மாட்டாள். நான் வராந்தாவில் படுத்துக்கொள்வேன். என்னைக் கண்டால் அவளுக்கு அவ்வளோ பயம் என்று சொல்லிக்கொண்டே போனான் அப்புச்சாமி.

நண்பன் தலையைச்சொறிந்து கொண்டான். 

அப்போது அப்புச்சாமியின் மனைவியின் குரல் கேட்டது.

இன்னுமா பேசிக்கிட்டு இருக்கீங்க. வந்து பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக்கொடுங்க என்று கத்தினாள்.

பார்த்தியா நண்பா.. வீட்டுபாடம் அவள் சொல்லிக்கொடுத்தால் மார்க் குறைஞ்சிரும்னுதான் என்னைச் சொல்லி கொடுக்கச் சொல்றா. என்மீது அவளுக்கு அவ்வளவு பயம் .


ஆமா அப்புச்சாமி . உண்மையிலேயே  உன்மீது உன் மனைவிக்கு ரொம்பவும் பயம்தான். கொஞ்சம் கோவம் வராமல் பார்த்து நடந்துக்க என்று நண்பன் அப்புச்சாமியை பார்த்து கவலைப்பட்டான்.


அப்புறம் நண்பா.. நீதான் நிறைய ஊர் சுத்துறயே... அதனால் எங்காவது ”வெயிட்லெஸ் பூரிக்கட்டை கிடைச்சா ஒன்னு வாங்கிட்டு வா” என்று அப்பாவியாகத் தலையைத் தேய்த்துக்கொண்டே அப்புச்சாமி கூறவும் அவன் மனைவியின் குரல் திரும்பவும் ஒலிக்கவும் சரியாக இருந்தது. 
இதோ வந்துட்டேன்  என்று அப்புச்சாமி வேகமாக வீட்டிற்குள் ஓடினான்.

ஞாயிறு, பிப்ரவரி 1

தாடியுள்ள பெண்கள்

                          ஆண்களுக்கு மட்டும் அழகா தாடி மீசை முளைக்குதே. பெண்களுக்கு ஏன் முளைப்பதே இல்லை!! என்று நானும் விவரம் தெரிந்த நாள் முதல் யோசித்ததுண்டு. ஹார்மோன்கள் ,உடற்கூறு என்று பல காரணங்கள்
 கூறப்பட்டாலும் பெண்களுக்கும் தாடி, மீசை முளைத்தால் இன்னும் அழகாக இருப்பார்கள் அல்லவா! மீசையை முறுக்கிக்கொண்டு பெண்கள் நடந்தால் இன்னும் கூடுதல் அழகுதானே. அந்தப்பயத்திலேயே ஆண்களும் பெண்களிடம் வாலாட்டமாட்டார்கள். கடவுளுக்கு இரக்கமே இல்லையா என்று நினைத்ததுண்டு. ஆண்கள் தினமும் தாடியை ஷேவ் செய்வதற்கே கால்மணிநேரம் ஆகிறது. பெண்களுக்கும் தாடி முளைத்தால் தாடியை இன்னும் அழகாக்கவேண்டும் , தேவர்மகன் மீசை போன்று ஸ்டைலாக ஏதாவது மீசை வைக்கவேண்டும் என்று பியூட்டி பார்லரில் இன்னும் கூடுதல் நேரம் செலவழிப்பார்கள் என்றுகூட மீசை, தாடி முளைக்காமல் இருந்திருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு. ஆனால் வெரியர் எல்வினின் உலகம் குழந்தையாக இருந்தபோது என்னும் நூலைப்படித்தபின் காரணம் புரிந்தது. வேடிக்கையான கதைதான்.
                         ஆதிகாலத்தில் பெண்களுக்கும் ஆண்களைப்போன்று தாடியும், மீசையும் இருந்தன. அக்காலத்தில் புலியே காட்டு விலங்குகளின் அரசன். இந்தப்புலி அரசனுக்கு ஒரு மகன் இருந்தானாம். மகனுக்கு மணம் முடிக்க பெண் தேடினான் அரசன். காட்டு விலங்குகளிடம் ‘ அழகிய பெண் ஒருத்தி கிடைத்தால் என் மகனுக்கு அவளையே மணமுடிப்பேன். அவளே அரசனின் பிரியமான மருமகள்; காட்டின் இளவரசியும் அவள்தான்’ என்றது புலியரசன்.
                     பெண் ஆடு ஒன்று இந்த அறிவிப்பை கேட்டதும் தன் எஜமானியிடம் சென்றது. “அம்மா, உன் அழகிய மீசை, தாடியை  எனக்கு கடனாகக் கொடு. நான் புலியரசனின் மனதை வென்று அவன் மருமகளான பின் இரண்டு அல்லது நான்கு நாட்களில் மீண்டும் வந்து உன் மீசை, தாடியை உன்னிடமே ஒப்படைக்கிறேன்.” என்றது ஆடு. எஜமானியும் தனது தாடி மீசையை வெட்டி எடுத்து ஆட்டிற்கு ஒட்டவைத்து அழகாக்கினாள். ஆட்டை வழியனுப்பியும் வைத்தாள். இப்போது எஜமானி அம்மா மீசை, தாடி இல்லாமல் அசிங்கமாக இருந்தாள். சென்ற ஆடும் புலியரசனின் மகளைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தது. ஆடு மீண்டும் திரும்பவேயில்லை. வெட்டப்பட்ட தாடி, மீசையும் மீண்டும் முளைக்கவேயில்லை. அது முதல் பெண்களுக்கு தாடி, மீசை முளைப்பதே இல்லையாம். பின்னாளில் அதுவே அழகாகிவிட்டது போலும். 
    இந்தக் கதையைப் படித்தபின்பு வீட்டுக்காரி மீசையை முறுக்கிக்கொண்டு என்முன்னால் காபியை கொண்டுவந்து நிற்பதுபோன்று நினைத்துப்பார்த்தேன். பயங்கர காய்ச்சல் வந்துவிட்டது.