ஞாயிறு, மார்ச் 22

சாணிவண்டு

               சாணி வண்டு ஏன் இவ்வளவு பலம் பொருந்தியதாக உள்ளது என பட்டோங்கோ இன மக்கள் கூறும் கதை இது. கதை சொல்லி நிக் கிரீவ்ஸ் எழுதிய சிங்கம் பறந்தபோது என்ற நூலில் இருந்து...


            முன்னொரு காலத்தில் சாணி வண்டும் வண்ணத்துப்பூச்சியும் சிறந்த நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். ஒருநாள் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது இவற்றை முதல் மனிதனும், முதல் பெண்ணும் பார்த்தார்கள்.
          “என்ன அழகிய வண்ணத்துப்பூச்சி!” என்று வியந்தனர். சற்று நேரம் அங்கேயே நின்று அதன் அழகை ரசித்தனர். அவர்கள் போனதும் சாணி வண்டு, வண்ணத்துப்பூச்சியிடம், “ எப்போது இவர்கள் உன்னைப் பார்த்தாலும் நின்று ரசிக்கின்றனர். என்னைப்பார்ப்பதே கிடையாது. அவ்வளவு அசிங்கமா நான்?” என்று கேட்டது.
         வண்ணத்துப்பூச்சி, “சீச்சி! அப்படியில்லை. அவர்களைக்கவரும் எதுவும் உன்னிடமில்லை! அவ்வளவுதான்! மனிதர்கள் அழகையும், பலத்தையும் ரசிப்பர். நீ பலமுள்ள பூச்சியாக மாறினால் உன்னையும் கண்டு ரசிப்பார்” என்றது.
          சாணி வண்டு வருத்தத்துடன், “நான் ஒருபோதும் பலசாலியான பூச்சியாக மாறமாட்டேன்” என்றது.
           வண்ணத்துப்பூச்சி, “ நிச்சயம் நீ பலசாலியாக ஆவாய்! ஒன்றை மட்டும் நினைவில் கொள்! முயற்சி செய்யாமல் எந்தப்பலனும் கிடைக்காது. முயற்சி செய் பலன் கட்டாயம் கிடைக்கும்!” என்றது. சாணிவண்டும் முயற்சி செய்ய முடிவெடுத்தது.
              உடற்பயிற்சி செய்து உடலைப்பலமாக்க முயற்சித்தது. விடாமல் முயற்சி செய்ததன் பலனாக பலமான பூச்சியானது. தன் நண்பன் வண்ணத்துப் பூச்சியிடம் திரும்ப வந்தது. தன் பலத்தைக்காட்ட தன்னைவிட பல மடங்கு பெரியதான் உருண்டைகளாக யானைச்சாணத்தை உருட்டிக்காட்டியது. பின்னாங்கால்களாலேயே அவற்றை நகர்த்திச் சென்றது.
            சாணிவண்டு இவ்வாறு செய்து காட்டியபோது அந்தப்பக்கமாக முதல் மனிதனும், முதல் பெண்ணும் அங்கே வந்தனர். சாணிவண்டின் பலத்தைப்பார்த்து வியந்தனர். அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கவே இல்லை. சாணி வண்டுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று முதல் சாணத்தை உருட்டி வருகிறது.
             சாணிவண்டு தன் பலத்தை பறைசாற்ற இப்படிச் செய்வதில்லை. தன் முட்டைகளை இந்த சாணி உருண்டைகளில் மறைத்து வைத்து தன் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்கிறது.

கூடுதல் தகவல் : சாணிவண்டின் அறிவியல் பெயர் பேக்கிலோமெரா பெமொராலிங். இது குழுவாகவே இருந்து உண்ணும். இதன் ஆயுட்காலம் 2 வருடங்கள். அடைகாக்கும் பருவம் 1 வாரம். இவற்றில் 750 வகைகள் உண்டு. ஆப்பிரிக்காவில் இவை பரவிக் காணப்படுகின்றன.இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆண் வண்டு “கல்யாணப்பந்து” தயாரித்து உருட்டும். அப்போது பெண் கவரப்படும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் கல்யாணப்பந்தை சாப்பிட்டுவிடும். தேன்நிலவு முடிந்தவுடன் இரண்டு வண்டுகளும் சேர்ந்து ஒரு சாணப்பந்து தயாரித்து அதை புதைத்து அதில் ஒரே ஒரு நீள்வட்ட வெள்ளை முட்டை இடும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் லார்வா பியூப்பாவாக மாறி சாணிவண்டாக மாறிவிடும். கீரியும் புனுகுப்பூனையும் இந்த லார்வாக்களை தேடித்திரிந்து உண்ணும்.
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா