ஞாயிறு, டிசம்பர் 28

வடை பாயாசம்

விச்சு(அட நான் இல்லீங்கோ.. இவர்தான் இந்தக் கதையின் நாயகன்) தரகரிடம் சொல்லிக்கொண்டிருந்தான். 
ஏழு கழுதை வயசாச்சுன்னு எங்க அம்மா அடிக்கடி சொல்லிக்கிட்டு இருக்காங்க. சீக்கிரமா கல்யாணம் முடிக்கனும்.
உடனே தரகரும் அட! அதுகென்ன நல்ல கழுதையா ஒன்னு பாத்துட்டா போச்சு என்றார்.
நீங்கவேற அண்ணாச்சி. ஒரு நல்ல அடக்கமான பொண்ணா பாருங்களேன். 
அடக்கமான பொண்ணு வேணுமின்னா மயானத்துக்குத்தான் போகனும்.
யோவ் தரகர்.. நான் சீரியஸா ஆயிடுவேன்.
அப்போ ஹாஸ்பிடலுக்கு போங்க தம்பி.
வேற வழியில்லாமல் சிரித்துவிட்டு..படாரென அவர் காலில் விழுந்தான்.
அவரும் மொக்கையை நிப்பாட்டிவிட்டு கல்யாணம்கிறது ஆயிரம் காலத்துப் பயிர் தம்பி என்றார்.
அப்போ ஆடு, மாடெல்லாம் மேய்ஞ்சிடாதா என்று அப்பாவியாக கேட்டான். பாடாரென அவர் விச்சுவின் காலில் விழுந்துவிட்டார். உங்க அறிவுக்கு நயன்தாரா மாதிரி பொண்ணு கொண்டு வாரேன் என்று உறுதிமொழி கொடுத்தார்.

விச்சுவுக்கு அன்று இரவு தூக்கம் வரவில்லை. நயன்தாராவுடன் டூயட் பாடுவதாக நினைத்துப்பார்த்தான். கூடவே பிரபுதேவா, சிம்பு, ஆர்யா என்று வரிசையாக ஹீரோக்கள் வர தனது முடிவை மாற்றிக்கொண்டான். நயன்தாரா வேண்டாம்... நம்ம ஊரு கருவாச்சி மாதிரி பொண்ணு கிடைத்தால்கூட போதும். அவளுக்கு காளியாத்தா மாதிரி கோபம் வருமே..! பரவாயில்லை..  கோபத்தில்கூட அழகுதான் என நினைத்துக்கொண்டே அசந்து தூங்கிவிட்டான்.

மேளதாளங்கள் முழங்க பச்சைக்கலர் பட்டுப்புடவையில் மணப்பெண் வர தாலிகட்டினான். மூன்றுமுடிச்சும் நான்தான் போடுவேன் என்று அடம்பிடித்துப்போட்டான்.

முதலிரவு அறையில் விச்சு சீரியஸாக புத்தகம் படித்துக்கொண்டிருந்தான். 
மணப்பெண் பால்சொம்புடன் வந்து பக்கத்தில் அமர்ந்தாள். 
ஏங்க.. என்ன படிக்குறீங்க?
புத்தகம்...
உங்க அறிவைக்கண்டு வியக்குறேன். 
படிச்சு முடிச்சிட்டு என்னங்க பண்ணுவீங்க?
மூடிதான் வைக்கனும்.
பால் சொம்பு டமாரென கொட்டியது.
ஓ..! அவள் கோபத்தில் இருக்கிறாள். 
நீ கோபப்படுவியா செல்லம்.
கோபம் வந்தா நான் காளியா மாறிடுவேன்
அய்யோ.. அப்போ நானு?
நீங்க காலிதான்.
ஹாஹா.. கஸ்டப்பட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கவலைப்படாத.. உனக்கு கோபம் வர்ற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் என்றான் .  புத்தகத்தின் பக்கத்தை புரட்டுவதை நிறுத்திவிட்டு 
என்னைப்பிடிச்சிருக்கா? என்று அப்பாவியாய் கேட்டான்.
பிடிக்காமலா...உங்கள் பக்கத்தில் இம்புட்டு நெருக்கமா உட்கார்ந்திருப்பேன்.

ம்ம்.. நாம ஹனிமூன் போக ஊட்டிக்கு ஒரு டிக்கெட் எடுத்திருக்கேன்.
ஒரு டிக்கெட்டா..!
அய்யோ சந்தோசத்துல தலைகால் புரியாம ஒரு டிக்கெட் மட்டும் எடுத்துட்டேனே..
பரவாயில்லைங்க.. நாளைக்கே இன்னொரு டிக்கெட் எடுத்திருங்க.

ஆமா! நீங்க நிறையா படிப்பீங்களா?
ம்ம்.. கவிதைகூட எழுதுவேன்.
நீங்க எழுதுனதை கொடுங்க. நானும் உங்கள் கவிதையை படிச்சுப்பாக்குறேன்.
இதோ..இந்த நோட்டு முழுவதும் என்னுடைய கவிதைதான். ரசனையா இருக்கும். நீயும் படித்துப்பார் என்றான் விச்சு.
என்னங்க கவிதை. ஒன்னுலகூட உப்புச்சப்பே இல்லை.
அடியே நான் படிக்கத்தான் கொடுத்தேன். உன்னை யார் தின்னு பாக்கச்சொன்னா..!
ஏங்க ..நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன். காளியா மாறிடுவேன்னு..

அப்புறம்.. 
அப்புறம்..
அப்புறம்..
இப்படியே பேசினா விடிஞ்சிரும். எனக்கு பத்து மணிக்கெல்லாம் தூக்கம் வந்திரும்ங்க..
பரவாயில்ல.. பட்டுக்குட்டி. இம்புட்டு நேரம் உன் தொல்லையை தாங்கிக்கிட்டேன், இன்னும் அரைமணி நேரம்தான.. என்றான் விச்சு.
வேண்டாம்.. நான் காளியா மாறிடுவேன்.

சரி அதைவிடு செல்லம். நான் இறந்திட்டா நீ என்ன பண்ணுவ?
நானும் உங்கள் கூடவே வந்திருவேன். நீங்க இல்லாத உலகத்துல நான் மட்டும் என்ன பண்ணப்போறேன்.
சரிதான்...அப்பவே அந்த ஜோசியக்காரன் சொன்னான். நீ செத்தாலும் சனியன் உன்னை விடாதுன்னு.
ஏங்க நான் காளியா மாறிட்டேன்.  இன்னும் ஒருவார்த்தைகூட பேசாமல் திரும்பி படுத்து தூங்குங்க. குட்நைட்.. என்று போர்வையை போர்த்தி படுத்துவிட்டாள்.

ஆஹா..! காளி தன் சுரூபத்தைக்காட்டிவிட்டாள். பயந்துபோய் அவனும் தூங்கினான்.
தூக்கத்தில் புலம்பினான்.
ஏங்க.. என்னங்க புலம்புறீங்க?
கனவுல நயன்தாரா வந்தாள்.
அப்புறம் திடீர்னு எதுக்கு கத்துனீங்க?
கனவுல நீயும் வந்துட்ட...
’நங்’கென்று மண்டையில் விழுந்தது.

காலையில் அம்மாதான் காபி கொண்டுவந்து விச்சுவை எழுப்பினார்கள்.
விச்சு பதறியபடி எழுந்தான். 
காளி எங்க? என்று அம்மாவிடம் கேட்டான்.
காளியா..! யார்ரா அது?
அடச்சே! எல்லாம் கனவா...! கல்யாணம் நினைப்புலேயே படுத்ததால கனவு வந்திருக்கும்போல என்றபடியே தலையைத்தடவினான்.
தலை புடைத்து வீங்கியிருந்தது.

புதன், டிசம்பர் 24

உன்னை நினைத்து


உன்னை நினைத்து
எழுதுவதெல்லாம்
கவிதையாகிறது
உன்னையே
எழுதுவதுதான்
காவியமாகிறது..!


உன்னை அணைக்க
நினைக்கும்போதெல்லாம்
என்னை பார்த்து
நிலா சிரிக்கிறது.


மரபுக்கவிதையா
வெண்பாவா
எனக்குத்தெரியாது
ஆனால்
நிச்சயம் நீ
புதுக்கவிதைதான்.


என் இதயம்
செய்யும் துரோகம்
என்னிடம் இருந்துகொண்டே
உன்னை நினைப்பது!


நீ விலக விலக
இறுகுகிறது
அன்பு!

சனி, டிசம்பர் 13

கற்பனை கடவுள்


மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ
உன் மொழியை நான் அறியேன்
 உன் பாலினமும் அறியேன்
இருக்குமிடமும் நான் அறியேன்
ஏதோவொன்றாய் நீ
அதுதான் கடவுளோ
குழந்தையின் சிரிப்பு
யாருக்கோ செய்யும் உதவி
யாரிடமோ பெறும் ஆறுதல்
ஏதோவொன்றில் நீ
அதுதான் கடவுளோ
உலகம் தோன்றிய 
அந்த ஆரம்பப்புள்ளி
சிந்தையில் அடங்காத உருவம்
மனித எண்ணத்திற்கும் அப்பாற்பட்ட
ஏதோவொன்று
அதுதான் கடவுளோ
எந்த மதமும் இன்னொரு 
மதக்கடவுளை ஏற்பதில்லை
ஏதோவொரு பெண்ணை
பார்த்த நிமிடத்தில் வரும் காதல்
மூத்தோர்களின் பயமுறுத்தலிலேயே 
வரும் கடவுள் நினைப்பு
இதுபோல்
பல குழப்பங்களில் வாழும்
மனம்தான் கடவுளோ
அதனால்தான்
மனம் ஏற்கவும் மறுக்கிறது
நிராகரிக்கவும் தயங்குகிறது
அந்த மாயம்தான்
கடவுளோ..!

வியாழன், நவம்பர் 27

கையளவு நீர்

                   
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கொளுத்தும் வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு வீட்டில் நுழைந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். முன்னாடி மேஜையில் அன்றைய நாளிதழ் கிடந்தது. எடுத்து வழக்கம்போல் தலைப்புச்செய்தியாக வாசித்தேன். வழக்கமான செய்திகள்தான். மேஜையில் சின்ன டம்ளரில் நீர் இருந்தது. யாரும் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்து அருந்தலாமா என யோசித்தேன்.
                   அப்போது மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. யாரென்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.  டம்ளரில் உள்ள நீர்தான் சிரித்தது. எனக்கு பயமாகிவிட்டது. பேய் ஏதாவது பிடித்திருக்குமோ என்று. சின்ன வயதில் அம்மா வெளி அறையிலிருந்து உள்ளே போய் கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டு வாடா என்றால்... முடியாது என்று மறுத்துவிடுவேன். உள் அறைக்குத் தனியாக சென்றால் பேய் பிடித்துக்கொள்ளும் என்ற பயம். நான்காம் வகுப்பு படிக்கும்போது யாருமில்லா ஒரு மதியப்பொழுதில் டவுசர் மாத்துவதற்காக கொடியில் கிடந்த டவுசரை எட்டி எடுத்தேன். அப்போது கிரீச் என்ற சத்தம். எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. அலறியடித்து வாசலில் வந்து நின்றுகொண்டேன். பக்கத்துவீட்டு மாமா என்னடா.. அம்மணமா நிக்குற என்ற விசாரிப்பில் எனக்கு சின்னதாக ஒரு அவமானம்தான். இல்ல மாமா  டவுசர் கொடியில் கிடக்குது... எனக்கு எட்டல என்றேன். அவர் வந்து எடுத்துக்கொடுத்தார். உடனே டவுசரை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த சத்தம் எனக்குள் இன்னும் ஒலிக்கிறது . பேயை நினைத்து பயந்ததுதான் காரணம்.
                      அப்புறம்  சூரியன் மறையும் ஒரு மாலைப்பொழுதில் மக்காச்சோளத்துக்காக காவல் காக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதற்காக பயந்து நடுங்கியிருக்கிறேன். பேயை நினைத்து பயந்துகொண்டிருக்கும் காலம் மாறவே இல்லை.
                    நண்பனின் அம்மா இறந்த அன்று நல்லமழை. மயானத்தில் சடலம் எரிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக நாலைந்துபேர் சென்றார்கள். அவர்களுடன் நானும் மயானத்திற்கு சென்று அரைகுறையாக எரிந்த சடலத்தைப்பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக்கொண்டேன். உள்ளூர நடுங்கியது வேறுவிசயம். மயானத்திற்கு சென்றுவந்த வீரக்கதையை நீண்டநாட்களாக  நண்பர்களிடம் சொல்லி நானும் வீரமானவன்தான் பேய்க்கு பயப்படாதவன் எனக்காட்டிக்கொண்டேன்.
                    இப்போதுவரை பேயை பார்த்தது இல்லை. ஆனால் பேயை நினைத்து மனதில்  ஏற்படும் பயம் இன்றுவரை மாறவில்லை. இது இப்படி இருக்க திடீரென யாருமற்ற அறையில் சிரிப்பு சத்தம் கேட்டால் பயப்படாமல் இருக்க முடியுமா! டம்ளரில் இருக்கும் நீர் நான்தான் சிரித்தேன் என்றவுடன் பயத்தைவிட ஆச்சரியம்தான் அதிகமாகியது. நானில்லாமல் நீங்கள் இருக்கமுடியாது என்று தலைக்கனத்துடன் பேச ஆரம்பித்தது. நான் பூமியில் ஏறத்தாழ 2/3 மடங்கு இருக்கிறேன் என்று இருமாப்பு காட்டியது. எல்லோரும் என்னை நீர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள் என்று இன்னும் அகம்பாவத்துடன் கூறியது.
                 நானும் பொறுமையாக கேட்டுக்கொண்டு ஆமாம்! நீர் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உன்னை பயன்படுத்தத்தான் எங்களைப்போன்ற உயிர்களை கடவுள் படைத்தார் என்றேன். அது வாய்விட்டு சிரித்தது. நாங்கள் இல்லாத இடமே இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல் என்று எங்கும் வியாபித்திருப்போம். மழை பெய்யவில்லையென்றால் விவசாயம் பொய்த்து மனிதர்கள் இறக்கவேண்டிவரும் என்று அகம்பாவம் குறையாமல் கூறியது.
                 இவ்வளவு அகம்பாவத்துடன் பேசுகிறாயே.. நீ நல்லவர்களுடன் மட்டும் சேராமல் கெட்டவர்களுடனும் சேருகிறாய். யாருடனும் எளிதில் கலந்துவிடுகிறாய் என்றேன். அது என்னுடைய இயல்பு என்று நீர் கூறியது. எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் எனக்கு கீழ்தான். நான்தான் உயர்ந்தவன் என்றது. நான் பொறுமையில்லாமல் அதன் கர்வத்தை அடக்க படக்கென்று டம்ளரை எடுத்து நீரை அருந்திவிட்டேன். 
                     இப்போது டம்ளர் சிரித்தது. நீ எதற்கு சிரிக்கிறாய் என்று வெறுப்புடன் கேட்டேன். மனித மனத்தை நினைத்து சிரித்தேன் என்றது. எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றது.  எந்த ஒரு உயிரினமும்  பாத்திரத்திற்குள் நீரை அடக்குவதில்லை. மனிதன்தான்
 நீரை மட்டுமல்ல எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து அடக்குபவன். எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் நீங்கள்தான் அகம்பாவம் பிடித்தவர்கள் என்றது. அமைதியாக நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.

ஞாயிறு, நவம்பர் 9

பந்தக்கால்

                 

                      விளையாட்டும் பேச்சுமாய் கலவையினூடாக கீழே கிடக்கிற செய்தித்தாள் கிழித்துப்போடப்பட்ட வாராந்திர, மாதந்திரிகளின் பக்கங்களை சேகரித்தெடுத்து அவைகளில் சிலவற்றை எனது சட்டைப்பையிலும் புத்தகப்பையிலுமாய் வைத்து பாதுகாத்த பழக்கத்தின் நீட்சியே என்னை ஓரளவு இலக்கியம் படிக்க வைத்தது எனலாம்... அப்படியான நாட்களின் நகர்வுகளில் உருவான வாசிப்புப்பழக்கம் இயக்கமும் என்னை கைப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய் இலக்கியத்தில் அனா, ஆவன்னா  எழுத வைத்தது என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விமலனை அநேகமாய் பதிவுலகில் நிறையப்பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

                 அவர் எழுதிய பந்தக்கால் என்னும் புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தொகுப்பில் மொத்தம் இருபத்திரெண்டு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்நூலினை “என்னை  சற்றே ஆழமாக இம்மண்ணில் பதியனிட்ட எனது பெற்றோர்களுக்கு” என அழகாக சமர்ப்பித்துள்ளார்.இந்நூலினை சரவணா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். எளிமையான வடிவமைப்பில் அழகாக உள்ளது.



                         பாலம் எனும் சிறுகதையில் வர்ணனை அருமை. ஒரு சின்ன நிகழ்வை அழகான கதையாக வடிவமைத்துள்ளார். வானத்திற்கும் பூமிக்கும் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய் இறங்கிக்கொண்டிருந்தது மழை.அடித்த காற்று மொத்த மழையையும் இங்கிட்டும் அங்கிட்டுமாய் தாலாட்டிக் கொண்டிருந்தது. என்று அழகான வர்ணனையுடன் ஆரம்பித்து விளாரான ரத்தக்காயங்களுடன் படுத்துக்கிடக்கிறது என்று பாலத்தின் மோசமான இயல்பையும் ரசிக்கும்படி எழுதியுள்ளார். கதையின் முடிவில் ஒரு சின்ன நிகழ்வை கோடிட்டு காட்டி கதையை முடித்துள்ளார். அதுவும் நெஞ்சைத்தொடும்படி..

                   பதியம் எனும் கதையில் மரக்கன்றுகள் நடுதல், மீதமான மரக்கன்றை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம், “பெரும்பாலும் செடிகளையும், மரக்கன்றுகளையும் பார்த்தே பேசினாள்..” என்று மரக்கன்று வாங்கும்போது நர்சரிப்பெண்ணின் இயல்பு என்று கலந்து கட்டுகிறார். 

                                குருத்து எனும் கதையில் மருத்துவமனைகளில் மனிதர்களை நடத்தும்விதம் அதுவும் அவர்களின் பிரத்தியோக பாஷையான ’கேஸ்’ என்ற வார்த்தையின் வலியை சொல்லியுள்ளார். ஒரு பெண் குழந்தை பெத்துக்கனும் எனும் முடிவு வெகு அழகு.

                            பன்றிகள் மேயும் பெருவெளியில் ஒரு பன்றிக்குட்டி அது வாழும் இடம் அதனால் எரிச்சலுறும் ஒரு மனிதமனம் என கதை நகழ்கிறது. முடிவில் அடிபட்டுக்கிடக்கும் பன்றிக்குட்டியை நாயை விரட்டியதின்மூலம் காப்பாற்றப்பட்டதாய் நினைக்கும் மனித மனத்தை என்னவென்று சொல்வது.

                  எனது மனதை பாதித்த கதைகளில் ‘சாயங்களில்..!’ எனும் ஒரு கதை. தவசிலிங்கத்தின் கதாபாத்திரத்தை நம்மோடு அழகாக அழைத்துச்சென்று அவர்மீது ஒரு பரிதாபத்தையும் உண்டாக்குகிறார். பெரும்பாலும் இவரின் கதைகளில் அது ஒரு நிகழ்வாகவே பதியப்பட்டிருக்கும். வாசிக்கும்போது கதாபாத்திரங்களினூடே நாமும் பயணிக்கலாம். ஐந்து பைசாவுக்கு கை நிறைய அள்ளித்தரும் பெட்டிக்கடை தவசிலிங்கம் இறுதியில்கால் ரூபாய் பிச்சை எடுப்பது நெஞ்சை அழுத்தும்.

                        சைக்கிள்காரக்கா கதாப்பாத்திரத்தின் மன உறுதியை ‘ஒற்றைச்சிறகு எனும் கதையில் காணலாம். இன்றும் பல பெண்கள் அந்த மன உறுதியுடன்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர்.

                பந்தக்காலு எனும் கதையில் ‘நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு பையங்களை பெத்தெடுத்து இந்த ஊரையே என்னன்னு கேக்கனும்’ என்ற வார்த்தை ஏனோ நண்பா! அந்தப்பெண்ணை பார்த்ததும் மின்வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள் என்று  நண்பனிடம் கூறுவது உணர்ச்சிபூர்வமாக இருக்கும். 

                   பசி என்ற கதை படிப்பதற்கு சற்று அயர்வைத் தந்தது. பெரிய பத்தியாக இருந்ததே காரணம் என நினைக்கிறேன். ஆனால் கதையும் கதையின் முடிவும் வெகு அழகு. இவருக்குப்பிடித்தமான டீக்கடையின் வர்ணனை இந்த நூலில் அவ்வளவாக இல்லை. எல்லா கதைகளைப்பற்றியும் எழுத ஆசைதான். எனக்குப்பிடித்த பல கதைகளை எழுதிவிட்டேன். மற்ற கதைகளை மற்றவர்களும் படிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். விமலனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள பூப்பதெல்லாம்... என்ற என் பழைய பதிவைக்காணலாம். விமலன் அவர்களின் சிட்டுக்குருவி என்னும் தளத்தில் அவரின் எழுத்துக்களை வாசிக்கலாம்.

ஞாயிறு, அக்டோபர் 26

சிறுதுளி ஆசை
























சின்ன சின்ன
ஆசைகள்
நிறைவேற புத்தனிடம் 
கேட்டேன்
எதன்மீதும் ஆசைப்படாதே 
என்று போதனை செய்தார்
புத்தனின் போதனைப்படிதான்
நடக்கிறேன்
நிறைவேறா ஆசைகளில் மட்டும்..!

-----------------------------------------------------------

பொருளற்ற ஆயிரம்
வார்த்தைகளைவிட
பொருளுள்ள ஒருசொல்
மேலானதாம்
அதுதான் அவளிடம்
காதலிக்கிறேன் 
என்று மட்டும் சொன்னேன்..!

----------------------------------------------------------

எதன்மீதும் ஆசைப்படாத
புத்தனின் ஆசை
ஆச்சரியம்தான்...!

----------------------------------------------------------

உங்களைத்தவிர
சரணடைய 
வேறு எவரையும்
நாடவேண்டாம் என்றாய்
நானும் நாடவில்லை
என்னவளைத்தவிர
 இருவரும் ஒன்றுதானே..!

----------------------------------------------------------

சனி, அக்டோபர் 18

பட்டப்பெயர்

              நம்மை அடையாளப்படுத்துவதே நம்முடைய பெயர்தான். பெயர் வைப்பதையே ஒரு விழாவாகக் கொண்டாடுகிறோம். அதுவும் தாய்மாமன் மடியில் குழந்தையை அமரவைத்து மொட்டைபோட்டு , காதுகுத்தி பெயர்வைப்பார்கள். பெயரில்தான் எத்தனை சுவராஸ்யங்கள் உள்ளன. 

              அடைமொழி என்பது ஒருவரின் திறமையின் அடிப்படையில் வழங்கும் சிறப்பு பெயராகவும் உள்ளது. அதே நேரத்தில் கேலிக்காக வைக்கும் பெயராகவும் உள்ளது. கிராமத்தில் கேலிக்காக வைக்கும் பட்டப்பெயர்தான் அதிகம்.  சிலர் குழந்தைகளுக்கு தங்களின் குலதெய்வத்தையும், சிலர் தங்களின் மூத்தோரையும்  இன்னும் சிலர் தங்களுக்கு பிடித்த தலைவர்கள் அல்லது நடிகர்கள் அல்லது தங்களுக்கு உதவி செய்த நண்பர்கள் ஆகியோரின் பெயர்களை வைப்பதுண்டு. சிலர் தான் காதலித்த நபரின் பெயரை வைப்பதுண்டு. அப்படி வைத்து மாட்டிக்கொண்டவர்கள் நிறையப்பேர் இருக்கிறார்கள்.  சமீபத்தில் நல்ல தமிழ் பெயர்களை நாம் குழந்தைகளுக்கு வைப்பதில்லை.

                  மகாத்மா என்றால் காந்தி அடிகள்தான். அன்னை என்றாலே தெரஸாதான். இப்படி சில அடைமொழிகளைச்சொன்னாலே வரலாற்றில் உள்ள பெரியவர்களின் பெயர்கள் ஞாபகம் வருகிறது. கப்பலோட்டிய தமிழன் வ உ சி, கர்ம வீரர் காமராஜர், மக்கள் தில்கம் எம்ஜிஆர் , சுரதாவை உவமைக்கவிஞர் என்றும், தமிழ்த்தென்றல் என்று திருவிக வையும் , பன்மொழிப்புலவர் என்றால் கா.அப்பாதுரை, குட்டித்திருக்குறள் என்றால் ஏலாதி, கவிஞர் என்றாலே கண்ணதாசனையும், இசைஞானி என்றால் இளையராஜா இப்படி அடைமொழிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி நூல்கள், கவிஞர்கள், தலைவர்கள், பெரியவர்கள் என் பலருக்கும் அடைமொழி  வைப்பதுண்டு. ஆனால் பட்டப்பெயர் என்பது அந்தப்பெயர் கொண்டு மட்டும் நாம் அழைப்போம். சில பெயர்களை நாம் கேலிக்கூத்தாக்கவும் செய்கிறோம். அதுவும் சினிமாவில் நடிகர்கள் தங்களுக்கென்று ஒரு அடைமொழி (பட்டப்பெயர்) வைத்துக் கொள்(ல்)வதுண்டு. வானத்தில்கூட அத்தனை ஸ்டார்கள் இருப்பதில்லை. சமீபத்தில் ”மம்மி ரிட்டன்ஸ்” என்ற அடைமொழியுடன் பல இடங்களில் போஸ்டர்கள். இதன் அர்த்தம் தெரிந்துதான் சொல்கிறார்களா! என்பது சந்தேகமே.

                 ஒரு தம்பதிக்கு தங்களின் குழந்தைக்கு பெயர் வைப்பதில் பெரிய சண்டையே வந்துவிட்டது. மனைவி தன்னுடைய அப்பாவின் பெயராகிய முத்தையா என்பதை வைக்கவேண்டும் எனவும் கணவன் தன் அப்பா பெயராகிய கிருஷ்ணன் பெயரைத்தான் வைக்கவேண்டும் எனவும் கடுமையான வாக்குவாதம். பக்கத்து வீட்டுக்காரர் ஓடோடிவந்து என்ன பிரச்சனை என விசாரித்து பஞ்சாயத்து பண்ணினார். கடைசியில் இருவரது பெயரையும் சேர்த்து முத்துராம கிருஷ்ணன் என வையுங்கள் என்று சொன்னார். இடையில் இது யார் ராமர்? என விசாரித்தால் பக்கத்து வீட்டுக்காரரின் தந்தை பெயராம். இப்படித்தான் பல இடங்களில் பெயருக்காக சண்டையே வந்துவிடும். 

                  பெயருக்கா இந்த அக்கப்போர் என்று நினைத்தால் அது உண்மைதான். பெயர் என்பது சாதாரண விசயமல்ல. எனக்கு சப்பாணி, பரட்டை என்றாலே 16 வயதினிலே படத்தில் கமல் ரஜினிதான் ஞாபகம் வரும். அந்த அளவுக்கு அந்தப்பெயர் மனதில் ஒட்டிக்கொண்டது.  

                   இவ்வளவு ஏன்..! எங்கள் ஊரில் சிலருக்கு வைத்திருக்கும் பெயரைக்கேட்டாலே சும்மா அதிரும். குண்டாக இருந்த ஒருவருக்கு நோஞ்சாம்பிள்ளை, ஒரு கண் ஒரு மாதிரி இருந்ததால் ஒருத்தருக்கு கண்ணப்பன், தரணி சர்க்கரை ஆலையில் வேலைபார்க்கும் ஒருவருக்கு தரணி, இலஞ்சி ஊரில் இருந்த வந்தவருக்கு இலஞ்சி, பம்பாயில் கொஞ்சகாலம் இருந்துவிட்டு வந்தவருக்கு பெயரே பம்பாய், இப்படி ஊரின் பெயரையும் அடையாளப்படுத்துவதுண்டு. பளிச்சி, புருவண்டு, அத்தக்கா, சீயக்கா, குட்டையன், ஊளைமூக்கன், மண்டையன், அவிச்ச முட்டை, முட்டைக்கோஸ், கத்தரிக்காய், தீவாளி, மண்டிக்காபி, டீக்க, பம்பையன், தவிட்டாயி, செம்பு, சப்பாத்தி இப்படி சில பெயர்கள் கேலியாக உலவுகின்றன. இன்னும் நிறைய பெயர்கள் உண்டு. அவர்களின் சொந்த பெயரை சொன்னால் ஊரில் யாருக்கும் தெரியாது. பட்டப்பெயரைச்சொன்னால் உடனே அடையாளம் சொல்லிவிடுவர். இது படித்து வாங்கும் பட்டம் இல்லை என்றாலும் எப்படியோ இது அவர்களின் அடையாளமாகி விட்டது. இந்தப்பெயர் சொல்லி கூப்பிடுவதால் அவர்கள் வருத்தமும் படுவதில்லை. 

          ரவுடிகளுக்கும் பட்டப்பெயர் உண்டு. பட்டப்பெயர் இருந்தால் மட்டுமே அவர் ரவுடி என போலீஸாரால் ஒத்துக்கொள்ளப்படுவார். கட்டை ராஜா, காக்கா தோப்பு , செம்பட்டையன், சந்தனக்கடத்தல் மன்னன், ஆட்டோ சங்கர், தாத்தா செந்தில் இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

         ஊர்களுக்கும் அடைமொழி உண்டு. பல தின்பண்டங்களுக்கு கூட ஊரின் பெயரை சேர்த்தே வழங்குவதுண்டு. திண்டுக்கல் பிரியாணி, திருவில்லிபுத்தூர் பால்கோவா, மணப்பாறை முறுக்கு, சாத்தூர் சேவு, விருதுநகர் பரோட்டா, திருநெல்வேலி அல்வா இப்படியும் பெயர்கள். திருப்பாச்சி அருவா, திண்டுக்கல் பூட்டு இப்படி பொருட்களுக்கும் பட்டப்பெயர் உண்டு. 

                     இம்புட்டு ஏன் எனக்கே ஒரு அழகான பட்டப்பெயர் உண்டு.  

வியாழன், செப்டம்பர் 4

கடவுள் மீது சத்தியம்

             ரஷ்யாவில் சொல்லப்படுவதாக ஒரு கதை. இந்தக்கதையை எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய “கேள்விக்குறி” என்னும் நூலில் படித்தேன். பொய் சொல்லும் கலையை எளிதாகச் சொல்லக்கூடிய ஒரு கதை. படித்துப் பாருங்கள். சுவையாக இருக்கும்.
               ஒரு விவசாயி இருந்தான். அவனுக்கு ஒரு மகன். அவன் சோம்பேறியாகவும் சாப்பாட்டு ராமனாகவும் இருந்தான். மகனுக்கு ஒரு திறமையும் இல்லையே என் விவசாயி கவலைப்பட்டான்.
              ஒருநாள் அந்த கிராமத்திற்கு வந்த யாத்ரீகன் அந்த விவசாயியைப் பார்த்து “ நீ ஏன் கவலைப்படுகிறாய்? உன் மகனுக்கு பொய் சொல்லக் கற்றுக்கொடு. பிறகு அவன் திறமைகள் தானே வளர்ந்துவிடும்” என்றான்.
               தன் மகனை பயிற்சியில் சேர்ப்பதற்கு விவசாயி தன் ஊரில் அதிகம் பொய் சொல்பவன் எவன் என்று தேடினான். ஒரு குடிகாரனைக்கண்டு தன் நிலைமையை சொன்னான். அவனோ நான் பிழைப்புக்காக பொய் சொல்பவன். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் கிராம நிர்வாகி. அவனிடம் சேர் என்றான். கிராம நிர்வாகியிடம் சென்றான். அவரோ நான் எம்மாத்திரம். என்னைவிட அதிகம் பொய் சொல்பவன் நாட்டின் மந்திரிதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார்.
                மந்திரியோ வெட்கத்துடன் அப்படியெல்லாம் நான் நிறைய பொய் சொல்லிவிடவில்லை. என்னைவிட அதிகம் பொய் சொல்பவது இந்த நாட்டின் ராஜாதான். அவரிடம் அழைத்துச்செல் என்றார். ராஜாவோ பெருமையோடு ”நான் பொய் சொல்வதில் கில்லாடியாக இருந்தாலும் அவ்வளவு பொய் எல்லாம் சொல்லிவிடவில்லை”. ஆனால் நான் செத்தபிறகு என்ன ஆவேன்? சொர்க்கம் எப்படி இருக்கும்? நரகம் எப்படி இருக்கும்? கடவுளைக்கண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் தினமும் பொய்கூறி என்னையும் நம்பவைக்கிறாரே  மதகுரு. அவர்தான் உலகிலேயே அதிகம் பொய் சொல்பவர். அவரிடம் அழைத்துச்செல் அன்றார். 
               விவசாயிக்கு தலை சுத்தியது. விடாமுயற்சியாக தன் மகனை மதகுருவிடம் அழைத்துச்சென்றார்.
                      மதகுரு சொன்னார். எனக்கு பொய் சொல்லும் திறமை எல்லாம் கிடையாது. ஒரே ஒரு பொய்தான். அதை வேண்டுமானால் நான் கற்றுத்தருகிறேன். “ நான் சொல்வதெல்லாம் கடவுள் மீது சத்தியம்!”.
ஆஹா! இந்த ஒரு பொய் போதுமே வாழ்நாளை ஓட்டுவதற்கு என்று விவசாயி சந்தோசமாக தன் மகனை அழைத்துச்சென்றான்.
                     என்ன நீங்க எங்க கிளம்பிட்டீங்க? பொய் சொல்லவா! ம்ம்ம்... ஆனால் எனக்கு கடவுள் மீது சத்தியமா பொய் சொல்லவெல்லாம் தெரியாதுங்க.

வெள்ளி, ஆகஸ்ட் 29

வேரறுந்த மரம்

             

                 முகமும் தளர்ந்திருக்கும் அவருடைய உடலும் மூக்கையா பிள்ளைக்கு எண்பெத்தி எட்டு வயதிருக்கும் எனக்காட்டியது. தன்னுடைய நான்கு பிள்ளைகளில் ஏற்கனவே இரண்டு பிள்ளைகளைப் பறிகொடுத்து விட்டிருந்தார். இப்போது அறுபத்தைந்து வயதான தனது மூத்த பிள்ளையும்  ஹார்ட் அட்டாக்கில் உயிரை விட்டிருந்தபடியால் கொஞ்சம் கண்ணீரோடு வாசலில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேரில் அமர்ந்திருந்தார் மூக்கையா பிள்ளை. 

                மூக்கையா பிள்ளை அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் ஓரளவு தெரிந்த பெரிய மனிதர்தான். இருந்தாலும் வீம்பும் பிடிவாதமும் பிடித்தவர். கதர் சட்டை வேட்டிதான் அணிவார். இன்றும் அந்த ஆடையைத்தவிர வேறு அணிந்ததில்லை. ஒரு காலத்தில் வியாபாரத்தில் உச்சத்தில் இருந்தார். தன்னுடைய பணத்தை எல்லாம் நிலங்களாக வாங்கி குவித்திருந்தார். இன்னும் மண்ணாசை அடங்கவில்லை.

                  பிள்ளைகள் நான்கு பேரும் அவ்வளவு வசதியானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. இரண்டு பெண் பிள்ளைகள் கல்யாணம் முடித்துக்கொடுத்து மாப்பிள்ளைகளின் தயவில் சந்தோசமாக குடும்பம் நடத்திவிட்டு பிள்ளைகளையும் பெற்று சின்ன வயதிலேயே நோயின் காரணமாக அடுத்தடுத்த சில வருடங்களில் இறந்துவிட்டனர்.

              மூக்கையா பிள்ளை தன்னுடைய மனைவி இருந்தவரை கம்பீரமாக சுற்றித்திரிந்தவர். தன்னுடைய பணத்தினை யாருக்காகவும் செலவழிக்காதவர். தன் உடம்பு சரியில்லாவிட்டால்கூட பணம் தராமல் சரியாகவேண்டும் என நினைப்பவர். இப்போதுகூட இறந்த தனது மூத்த பிள்ளையின் மருத்துவ செலவுக்குகூட சல்லிக்காசு செலவழிக்காதவர். மூத்த பிள்ளையின் மனைவிக்குச் சொல்லி அழக்கூட உறவினர்கள் யாருமில்லை. அமைதியாக வழியும் கண்ணீரோடு கணவனை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

          துக்கம் விசாரிக்க வந்தவர்கள் அனைவரும் மூக்கையா பிள்ளையை மறைமுகமாக வசைபாடிக்கொண்டிருந்தனர். 

                        ”இம்புட்டு பணத்தையும் வச்சுக்கிட்டு மனுசன் என்ன பண்ணப்போறாராம்.

                                        இவர் மட்டும் கொஞ்சம் பணம் செலவழித்திருந்தால் இதய ஆப்பிரேஷன் பண்ணி அவரைக்காப்பாற்றி இருக்கலாம். வயசாக வயசாக இம்புட்டு பிடிவாதம் இருக்கக்கூடாது”

                 புள்ளைகளுக்குகூட உதவாத அந்தப்பணம் எதுக்கு! 

                       நிலமா வாங்கி குவிக்கிறாரே! இவரு சாகுறப்போ கொண்டா போகப்போகிறார்!  என்று ஆளாளுக்கு அவரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தனர்.

                        எந்தச் சலனமும் இன்றி மூக்கையா பிள்ளை அமர்ந்திருந்தார். இறந்த உடலை தூக்குவதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

                  மூக்கையாபிள்ளையின் பால்ய தோழரான சுப்பையா நாயக்கர் துக்கம் விசாரிக்க அப்போதுதான் காரில் வந்து இறங்கினார். அவரும் மூக்கையாபிள்ளைக்கு ஈடான வசதி படைத்தவர்தான். பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து நல்ல வேலையில் அமர்த்தி திருமணமும் முடித்துக் கொடுத்துவிட்டார்.

                 அவரைப்பார்த்தவுடன் மூக்கையாபிள்ளைக்கு ஒரு பக்கம் சந்தோசம். அவருடைய இடம் ஒன்றினை ஏற்கனவே விலைக்கு கேட்டிருந்தார். அதை வாங்குவதற்கான சந்தர்ப்பம் இதுவரை அமையவில்லை. அந்த எண்ணம் மூக்கையாபிள்ளையின் மனதில் ஓடி மறைந்தது. சில சம்பிரதாய விசாரிப்புகளுக்குப்பின் சுப்பையா நாயக்கர் அவசர வேலை இருப்பதாகக்கூறி கிளம்பிவிட்டார்.

                     உறவினர்கள் அனைவரும் வந்து சேர்ந்திருந்தனர். பொழுது சென்றுகொண்டிருந்தபடியால் உடம்பினை சீக்கிரம் தூக்கவேண்டும் என்றனர். அனைவருக்கும் பசி வேறு வயிற்றைக்கிள்ளியது. வந்தவர்களுக்கும் அழுது கொண்டிருப்பவர்களுக்கு சுக்கு காப்பி கொடுத்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றியது. மூக்கையா பிள்ளையிடம் உறவினர் ஒருவர் கொஞ்சம் பணம் கொடுங்கள்... வந்தவர்களுக்கு காப்பித்தாண்ணி வாங்கித்தரனும் என்று கேட்டார். அதெல்லாம் எதுக்குய்யா.. இப்போதான் கிளம்பிருவோம்ல.. என்று மூக்கையா பிள்ளை மறுத்துவிட்டார். உறவினர் முணுமுணுத்துக்கொண்டே துண்டை வாயில் பொத்தியபடி மரப்பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்துவிட்டார். மற்ற செலவுகளை இன்னொரு மகன்தான் செய்து கொண்டிருந்தார்.

                 உடம்பு தூக்கப்பட்டது. மலர்களைத் தூவி விட்டபடி முன்னாடி ஒருவன் செல்ல உடம்பின் பின்னே அனைவரும் வரிசையாகச் சென்றனர். மூக்கையா பிள்ளையும் மெதுவாக நடந்து சென்றார். இப்போது மனதில் சுப்பையா நாயக்கர்தான் இருந்தார். அவரின் இடத்தை வாங்குவதற்கு இன்னும் கொஞ்சம்தான் பணம் தேவை. என்ன செய்யலாம் என்ற யோசனையிலேயே வந்தார்.

                 மயானத்தில் எல்லாச்சடங்குகளும் முடிந்து கொள்ளி வைக்கப்பட்டது. 
                             மூக்கையாபிள்ளைக்கு திடீரென ஒரு யோசனை வந்தது. இறந்த மூத்த மகன் கொடுத்து வைத்திருந்த பணம் இவரிடம்தான் இருந்தது. அதையும் சேர்த்தால்  எப்படியும் சுப்பையா நாயக்கரின் இடத்தை வாங்கி விடலாம் என்ற நம்பிக்கை வந்துவிட்டது.

                தீ இப்போது ”மளமளவென..” எரியத்தொடங்கியிருந்தது.

வெள்ளி, ஆகஸ்ட் 22

குண்டுப் பெண்


கடந்த பத்தாயிரம்
ஆண்டுகளில் எந்த நாட்டின்
மீதும் இந்தியா
போர்தொடுக்கவில்லையாம்
நான் ஒவ்வொரு மணித்துளியும்
தொடுத்துக்கொண்டுதான் இருக்கிறேன்
விட்ட அம்புகள் எல்லாம்
என் விலா எலும்பில்
சரியான ஆசான்தான்
இல்லையோ என்ற 
சந்தேகம் எனக்கு
வளைந்த பெண் பற்றி 
வகுப்பெடுத்தவன் நான்
நீ கொஞ்சம் உடம்பைக்குறை
என்றால்
நீ கொஞ்சம் சதை வை
என்கிறாய்
உலகில் என்றுமே நடக்க 
வாய்ப்பில்லாதவை இவை
போர் வீரன் என்று
பெயரெடுக்க நினைத்தால்
என்னை சரியான 
‘போர்’ வீரனாக்கி விடுகிறாய்
என்னுடன் விழிச்சண்டைக்கு வா
ஒற்றைக்கு ஒற்றையாய்
சற்றே பொறுத்திரு
இன்னும் கொஞ்சம் எனது
அம்பை கூர்மையாக்கிவிட்டு
வருகிறேன்
கூரியவற்றை எல்லாம் வெல்லும்
காதல் வீரனாய்..!



செவ்வாய், ஆகஸ்ட் 19

கூச்சம்

                

              கூச்சம் எல்லோருக்கும் பொதுவானது. தோல், பாதம், உள்ளங்கை போன்றவற்றில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன. இதில் அவற்றின் மேற்போர்வை இல்லை. அதனால் குறைந்தபட்ச தூண்டல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றுள்ளன. காதலியின் இடுப்பு, கன்னம், பாதம், உள்ளங்கையை வருடுவது சுகமான அனுபவம்தான். இந்தக்கூச்ச உணர்வு மனிதர்களுக்கு இல்லையென்றால் சந்தோஷம் என்று ஒன்று காணாமல் போயிருக்கும். எல்லோருமே மரத்துப்போய் அலைவார்கள்.  குழந்தைகளுக்கு இந்த கூச்ச உணர்வு சற்று அதிகமாக இருக்கும். 

                                        இதைப்பற்றிய 1996ல் வெரியர் எல்வின் எழுதிய உலகம் குழந்தையாக இருந்தபோது என்ற நூலில் ஒரிஸாவைச் சேர்ந்த கொண்டர் இனமக்கள் கூறிய கதை இது. ஆதி காலத்தில் குஷி உண்டாக்கும் கூச்ச உணர்ச்சி மக்களிடம் இல்லாத போது அவர்கள் ஒழுக்கத்துடன் இருந்தனர். சேர்ந்து உட்கார்ந்து, பொறுப்புணர்ச்சியுடன் தத்தம் கடமைகள் பற்றியும், தம் பயிர் விளைச்சல் பற்றியும் பேசினர். இப்போதுபோல அர்த்தமற்ற சிரிப்போ, தேவையற்ற வேலையோ எதுவுமில்லை.

              நிரந்தலா எனும் தேவதைக்கு இது அலுப்பாக இருந்ததாம். இநதச் சாரமற்ற வாழ்க்கையை சற்றே மாற்றி, வாழ்வில் வண்ணம் சேர்க்க நினைத்தது. காட்டுக்கு போய் மெழுகு எடுத்து, கூச்ச உணர்ச்சியை வெளிப்படுத்தும் உயிர் வண்டு ஒன்றை உருவாக்கியது.ஆம்,  குழந்தைகளின் வயிற்றுக்குள் இந்த வண்டைச்செலுத்தியது. “உள்ளே போனது மோவாய் அடியில், அக்குள், விலா அருகில் வசித்து வா, யாராவது தொட்டால் உள்ளே ஓடு, அவர்களுக்கு கூச்சமும், சிரிப்பும் வரும் என்று தேவதை கூறியதாம். வண்டும் அவ்வாறே செய்தது.

                 எட்டு நாட்கள் கழித்து வண்டு நுழையப்பெற்ற ஆண், பெண்களைக்காணச்சென்றது. பொறுப்புணர்ச்சி மறைந்து எங்கும் காதல் வாழ்வும், சிரிப்பும் நிறைந்திருந்தது. ஒரு பெண்ணின் இடுப்பைத்தொட பெண் சிரித்துக்குலுங்கினாள்.

                இந்த அர்த்தமற்ற சிரிப்பும், கூச்சமும் இப்படித்தான் தொடங்கினவாம். நிரந்தலா தேவதை இல்லையென்றால் காதலியை எங்கே தொட்டாலும் கூச்சமிருக்காது. எரிச்சல்தான் படுவாள். வாழ்க நிரந்தலா... வாழ்க..வாழ்க...

சனி, ஆகஸ்ட் 16

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

               கருப்பு - நிறங்களின் இல்லாமை. இது ஒரு நிறமல்ல. வெளிச்சத்தின் முந்தைய நிலை. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கருப்பின் தாக்கம் அதிகம்தான். சிவப்பாக்கும் கிரீம்கள் அதிகம் விற்பதும் இந்தவகை நாடுகளில்தான். கோவில் சிலைகளின் வண்ணம்கூட கருமைதான். பார்ப்பதற்கு அழகு தருவதும் அதுதான். சிலைகளை கருப்பாக்கவே எண்ணெய் வழிபாடு. கரிய மேகமும் அழகுதான். துக்கம், மரணம் போன்றவற்றைக் குறிக்கவும் கருப்பு பயன்படுகிறது.

”கண்ணா கருமை நிறக்கண்ணா
உன்னைக்காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை...”

”கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..” போன்ற பல சினிமாப்பாடல்கள் கருப்பை புகழ்கின்றன.



            கிருஷ்ணா என்ற சொல்லுக்குகூட கருமை என்றுதான் அர்த்தமாம். கிருஷ்ண, ஷ்யாமள,நீளா எல்லாமே வடமொழியில் கருப்பு நிறத்தைத்தான் குறிக்கும். நீளம் என்பது வெளிச்சம் இல்லாத ஒரு நிலைதான். சூன்யம் என்றுகூடக்கொள்ளலாம். கடவுள்களில் காளியும் , காமாட்சியும் கூட கருப்புதான்.   நீதிமன்றங்களில் கருப்பு அங்கிதான் அணிகின்றனர். சிலர் கருப்பை வெறுக்கவும் செய்கின்றனர். நிறவெறிதான் இது. நிறத்தை வெறுத்தால் அவன் மனிதனே அல்ல. மனிதமனம் அத்துனை நிறத்தையும் ரசிக்கும் ஆற்றல் பெற்றது. ஒவ்வொரு சூழலுக்கு ஒவ்வொரு நிறம் அழகு. அயல் மகரந்தச்சேர்க்கை நூலில்  அப்துல் காதர் கருப்பு பற்றிய கவிதையில் அழகாக எழுதியுள்ளார்.

”ஏசுவே!
மீண்டும் நீ
பிறந்து வருவாய் எனச்
சுருதி வேதங்கள்
உறுதி கூறுகின்றன.
மீண்டும் பிறந்தால்
கர்த்தரே!
கருப்புநிற ஏசுவாகப் பிறக்க வேண்டாம்!
ஏனெனில் உன்னையும் அவர்கள்
உள்ளே அனுமதிக்கப் போவதில்லை!”
--------------------------------------------------
பெண்ணே!
உன் முகம்
ரோஜாத்தோட்டம்தான்
இருந்தாலும்
அந்தக் கருப்பு மச்சம்
நீக்ரோ
தோட்டக்காரனைப்போல’


    நானும் கல்லூரிக்காலங்களில் எப்படியாவது சிவப்பாகவேண்டும் என்ற நம்பிக்கையில் அதிகம் உபயோகித்து எந்த பலனுமில்லால் பல கிரீம்களை ஒதுக்கிவிட்டேன். பணமும் நேரமும் செலவழிந்ததுதான் மிச்சம்.  இயற்கை தந்த கொடை கருப்பு. கருப்பு மச்சம் பிடிக்கிறது. உடம்பே மச்சமாயிருந்தால் பிடிக்காமலா போய்விடும்.ரோஜாவில்கூட கருப்பு ரோஜா என்கின்றனர். ஆனால் பார்த்ததில்லை. அதன்பின்பு கருப்புதான் எனக்கு பிடித்த நிறமானது. வேறுவழி? இரவும்கூட கருப்புதான். காதலியுடன் இருக்கும் நேரங்களில் கரிய இரவுதான் பிடிக்கிறது. என் காதலியுடன் அவ்வப்போது அருந்தும் கருப்பு தேநீர்கூட பிடித்தமான ஒன்று. அதன் சுவை மட்டுமல்ல. அதன் நிறமும்கூட.

கருப்பு
எனக்குப் பிடிக்காத ஒன்று
என் கருப்பு காதலியைத் தவிர!



        என்றேனும் கருப்பு வானவில் தோன்றுமா என்று மழை பெய்து ஓய்ந்த பொழுதுகளில் வானத்தை அண்ணாந்து பார்த்ததுண்டு.
கருப்பு வெறும் நிறம் மட்டுமல்ல. ஆண்டவன் கொடுத்த வரம்.
உழைப்பாளியின் கருப்பு நிறத்தை ரசிக்காமல் நாம் உணவு உண்டால் ஜீரணமாகாது.  கருப்பு தங்கம் என்கின்றனர். தங்கத்தில் கருப்பு உண்டா எனத்தெரியவில்லை. கருப்பு வைரம் உண்டு போல. யாரையும் எதிர்ப்பதற்கு கருப்பு கொடி காட்டுகின்றனர். அசம்பாவிதம் நடந்த நாட்களை கருப்பு தினம் என்கின்றனர். முடிகூட கருப்பாயிருப்பதற்கு எத்தனையோ மெனக்கிடல்கள். ஒரு நரை வந்தாலும் அலறியடிக்கிறோம். உயரமான சற்றே கருமை நிறமுடைய பெண்களின் அழகுக்கு ஈடே இல்லை. கொஞ்சம் கலரான பெண்கள்கூட கருப்பு நிற புடவையில் சற்று கூடுதல் அழகாகவே தெரிவார்கள். என் கண்களுக்கு மட்டுமா எனத்தெரியவில்லை.
    வேலை செய்து அலுத்துத் தூங்கும் வேலையில் அங்கு கருப்புதான் இருக்கிறது. அதுதான் நிம்மதியும் தருகிறது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.

வெள்ளி, ஆகஸ்ட் 15

தேவை ஒரு மணப்பெண்


தேவை
ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடன்

கல்யாண வியாபாரத்தில்
அதிக தொகைக்கு யாராவது
அவனை ஏலம் எடுத்துக்கொள்ளுங்கள்

உன்னை முடிந்தவரை நகைகளால்
உன் வீட்டிலிருந்து பூட்டிக்கொள்
எதற்கென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டிற்கு தேவையான
அத்தனையும் சீராய் கொண்டுவந்துவிடு
எல்லாம் நானே என்றால்
அவன் எதற்கு 
என்று எதிர்கேள்வி கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

இரவுப்பசிக்கு உன்னைக்கேட்காமல்
எடுக்க அனுமதி
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

புகுந்தவீட்டில் எல்லோரையும்
அனுசரித்துப்போ
ஏனென்று கேட்காதே
தேவை உனக்கு பொறுமை

வீட்டு வேலைகள் அத்தனையும்
எதிர்கேள்வி கேட்காமல் செய்துவிடு
தேவை உனக்கு பொறுமை

ஏன் லேட்டு 
ஏன் குடித்தாய்
சம்பளம் எங்கே
எதையும் கேட்டுவிடாதே
தேவை உனக்கு பொறுமை 

அவனின் காலை அமுக்கிவிடு
பாவம் அவன் மட்டும்தானே
நாளெல்லாம் வேலை பாக்குறான்
தேவை உனக்கு பொறுமை 

உன் உடல்நலத்தை உடைத்து
குடும்பத்தாரின் உடல்நலம் பேண்
தேவை உனக்கு பொறுமை 

இப்படிப்பட்ட குணவானுக்கு
தேவை ஒரு மணப்பெண்
கொஞ்சம் அழகுடன்
நிறைய பொறுமையுடனும்..!



ஞாயிறு, ஆகஸ்ட் 10

கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை, இருமல்

              மனிதனுக்கு ஏற்படும் கொட்டாவி, ஏப்பம், தும்மல், விக்கல், பொறை மற்றும் இருமல் இவை எல்லாமே நம் உடற்செயல் நிகழ்ச்சிகள் சரிவர நடைபெறுகின்றன என்று தெரிவிக்கின்ற உடற்செயலியல் பிரதிபலிப்புகள்தான்.
கொட்டாவி : 
ஆவ்வ்வ்வ்வ்..... நமக்கு களைப்பு ஏற்படும்போதும், மூளை சோர்வடையும் போதும் நமக்கு அறிவிக்கும் செயல் கொட்டாவி ஆகும். கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகின்றனர். ரத்தத்தில் கார்பன் டை ஆக்ஸைடு அளவு அதிகரிக்கும்போதும் கொட்டாவி வரலாம். நாம் உள்ளிழுக்கும் காற்று ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க துணை புரியலாம் என்கிறது ஒரு ஆய்வு. கொட்டாவி விடுபவர்களைப் பார்த்தாலே கொட்டாவி வரலாம். இம்புட்டு ஏன்.. கொட்டாவின்னு டைப் பண்ணும்போதே ஆவ்வ்வ்வ்வ்... எனக்கு கொட்டாவி வருகிறது. கொட்டாவி ஒரு தொற்றுச்செயல்.

TRB RESULT

முதுகலை பட்டதாரி ஆசிரியர் (POST GRADUATE TEACHER) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Paper II subject wise PDF File
Paper II Individual Query
PG Individual Query
PG SubjectWise PDF File

செவ்வாய், மே 13

பூப்பதெல்லாம்...

      ஓவியா பதிப்பகத்தார் வெளியிட்ட விமலனின் “பூப்பதெல்லாம்..” என்ற சிறுகதைத்தொகுப்பினை சமீபத்தில் படித்தேன். அது சிறுகதைத்தொகுப்பு என்பதைவிட நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சகமனிதர்களைப் பற்றியது எனச் சொல்லலாம்.
    விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த விமலன் பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றுகிறார். இவரின் சிட்டுக்குருவி என்ற வலைப்பூவில் சமூகம் சார்ந்த பதிவுகளை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். நல்ல மனிதரும்கூட.. இவரின் முந்தைய வெளியீடுகள் வம்சி பதிப்பகத்தின் “காக்காச்சோறு”, அலமேலு பதிப்பகத்தின் “தட்டாமாலை”, வம்சி பதிப்பகத்தின் “வேர்களற்று”..


   அவரின் பதிவுகள் பெரும்பாலும் வாழ்வியல் சார்ந்தும் நம்மோடு பயணிக்கும்படியான தொனியில் கதைகள் அமைந்திருக்கும். தேநீர்கடை, சலூன்கடை, பலசரக்குக்கடை, மில் தொழிலாளர்கள் என்று நாம் அன்றாடம் பழகும் மனிதர்களைப்பற்றியும் அவர்களின் எளிமையான வாழ்க்கையையும் பதிவு செய்திருப்பார்.
    பூப்பதெல்லாம்.. என்ற இந்த நூலில் “பரந்து விரிந்து கிடந்த கரிசல் பூமியில் சட்டையில்லா வெற்று மேனியில் இறுக்கிக்கட்டிய தார்ப்பாய்ச்சியுடன் விதை தூவிப்போய்க்கொண்டிருந்த பாலா அய்யாவின் பின்னால் நானும், கிட்ணண்ணனும், பெரியாம்ளயும் ஒன்றன்பின் ஒன்றாகவும், வரிசை காட்டியுமாய் ஏர்பிடித்து விதைப்பு உழவு உழுதுபோன காலங்களும்… “ என்கிற விதமாய் இவரைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ளும் பாங்கு நம்மோடு வாழும் சகமனிதனின் கதையை சொல்லப்போகிறார் என்ற எண்ணத்தினை நமக்கு கொண்டுவருகிறது. 
    வெல்லக்கட்டி என்ற கதையில் ”உப்புமீது துவரம்பருப்பும், பருப்புமீது அரிசியும் அரிசிமீது காய்கறிகளும், எண்ணெய் டின்னின்மீது வெல்லக்கட்டிகளும்..” என்று காசியப்பனின் கடையினை விவரித்திருக்கும் பாங்கு நான் சிறுவயதில் எங்கள் ஊரில் பார்த்த கடையினை அப்படியே காட்சிப்படுத்துகிறது.
    வல்லினம், மெல்லினம் என்ற கதையில் ஆயில் மில்லைப்பற்றியும் அதில் வேலைபார்க்கும் மனிதர்களையும் கண்முன் கொண்டுவருகிறார்.
ஒவ்வொரு கதைக்கும் வைத்திருக்கும் பெயர் வித்தியாசமானதுதான். வாட்டர் ஸ்பிரெயர், ஸ்கிரீன் ஷேவர், சுழியிடம், கத்தரிப்பான், விலாசம் என்று பட்டியல் நீண்டுகொண்டிருக்கிறது.
    நாணல் புல்.. ஒரு பெண்ணின் மீள் நினைவுகள், அவள் சேலைகட்டியிருக்கும் பாங்கு அந்த சேலையின் நிறம், டீக்கடையில் அவள் வந்துபோகும் காட்சிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய் கதைக்குள்ளிருந்து நிஜ உலகத்திற்கு கொண்டுவந்துவிடுகிறது.
     இன்னும் நிறைய சொல்லலாம். மொத்தம் 21 கதைகள். ”மேனிபருத்த வேப்பமரம் – அது உதிர்த்த பூக்கள், மஞ்சளும் வெள்ளையும் கலர் காண்பித்து கிடப்பவைகளை இன்று எப்படியும் கூட்டிவிடவேண்டும். நேற்று நினைத்து முடியாமல் போனதை இன்று செயலாக்கிவிட வேண்டும். பூப்பவையெல்லாம் காய்க்குமானால் தாங்குமா மரம்?”

     இந்தப் புத்தகத்தில் பூத்த பூக்களையெல்லாம் பட்டியிலிடவும் முடியாது. நீங்கள் படித்துப்பாருங்கள். நம்மோடு பயணிக்கும் சகமனிதனின் வாழ்க்கையை நீங்களும் ரசித்து அவனின் சோகத்தை கொஞ்சம் பகிர்ந்தும் கொள்ளுங்கள். 

Oviya Pathippagam
17-16-5A, K.K.Nagar,
BATLAGUNDU- 642 202.
TAMILNADU

வியாழன், ஏப்ரல் 10

வேப்பமரத்தின் மனம்

    ப்ஊ.. ப்ஊ... தூசியை வாயால் ஊதினேன். அப்பப்ப்ப்பா.. மேஜையில் எவ்வளவு தூசு. ஒருவழியாக சுத்தம் செய்தபின் மேஜையையும் நாற்காலியையும் இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.
ஜன்னலின் ஓரம் அமர்ந்து கவிதை எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
கவிதையா..! 
என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது.
கவிதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை ஜன்னலின் அருகே என்னையே உற்று பார்ப்பதுபோல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் எழுதினேன். மீண்டும் மனசுக்குள் ஒரு உறுத்தல். என்னைத்தான் பார்க்குமோ என்று சற்று நிமிர்ந்து பார்த்தேன். தலையைத் திருப்பிக்கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் எழுதத்துவங்கினேன். இப்போது மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. 
யாரது? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தேன். 
மரமேதான்... ஆச்சரியம் மேலிட என்ன என்று புருவம் உயர்த்தினேன்.
எப்போது பார்த்தாலும் எழுதுகிறாயே..! அப்படி என்னதான் எழுதுவாய் என்று கேட்டது.
என் தனிமையை போக்கவும், எனக்குள் தோன்றும் சில கருத்துக்களையும் எழுதுவேன் என்றேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வேப்பமரம்..
நீ கருக்கொண்டிருப்பாயோ!
இத்தனை வார்த்தைகள்
உனக்குள் பிறக்கின்றன.
என்று கூறியது.
வேப்பமரத்தின் பேச்சு எனக்கு வியப்பினை தந்தது.
என் மனதில் வார்த்தைகள் ஊறிக்கொண்டிருக்கும் என்றேன்.
உடனே அது மனத்தினை எப்போதும் குப்பைபோல நிறைத்திருப்பாயோ என்று கேட்டது.
எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.
காலியான மனம் ஒன்று உண்டா? என்று கேட்டது.
கண்டிப்பாக இருக்க முடியாது என்றேன்.
அது சிரித்தபடியே பொருட்களை வாங்கி வீட்டினை நிரப்புகிறீர்கள். சொற்களை வாங்கி மனசை நிரப்புகிறீர்கள் என்றது.
எண்ணங்களும் மனசை நிரப்பும் என்றேன்.
எதை எண்ணுவீர்கள்?
காதலி, குடும்பம், ஊர், வேலை பார்க்கும் இடம், அன்றாட நிகழ்வுகள் இப்படி எதையாவது எண்ணுவேன். மனம் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டு இருக்கும்.
நடந்தவை
நடந்துகொண்டிருப்பவை
நடக்கப்போகின்றவை
யோசித்துக்கொண்டேயிருக்கும்
மனம்.
அதற்கு ஓய்வில்லை என்று சொன்னவுடன்…
வேப்பமரம் ஆமோதிப்பதுபோல் கிளையை அசைத்தது.
மனிதன் மட்டுமே இப்படி மனசை உலட்டியபடி அலைகிறான். அவனுக்குள் எப்போதும் திராவகம்போல் எண்ணங்கள் அரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மனம் வெறுமையாய் இருந்தால் அவன் இறந்துபோய்விடுவான். அவன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் மனம் மட்டுமே என்றது.
வெறுமையான மனம் என்று ஒன்று கிடையாது. மனிதர்கள் குப்பைகள் என்றது.
நான் என்னுடைய எண்ணங்களை இலைகளாக முளைக்கச்செய்து, தேவையில்லாதவற்றை உதிரச்செய்வேன் என்றது. நாங்கள் அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக்கி மனசுக்குள் புதைத்துவைக்கிறீர்கள். அவை கை கால்களுடன் முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது ஓங்கி வீசிய காற்றில் அந்தக்கிளை முறிந்து விழுந்தது.
நான் அமைதியானேன்.
மனம் மீண்டும் யோசிக்கத்தொடங்கியது.