சனி, ஜனவரி 31

நான் யார்?

2175ம் ஆண்டு  ஒருநாள்  மாலை 5.00 மணி :
மூளை மாற்று அறுவை சிகிச்சையில் பெரிய கில்லாடிதான் விஷ்ணு. இவர் ஒருவர்தான் இந்தியாவிலேயே மிகச்சிறப்பாக இந்த அறுவை சிகிச்சையை செய்யக்கூடியவர். அவரைத்தேடி உடம்பெல்லாம் மூடிக்கொண்டு ஒருவர் வந்தார்.
வணக்கம் சார்(நல்லவேளை... தமிழ் இன்னும் வாழ்கிறது) என்னை ஞாபகம் இருக்கிறதா?
நன்றாக ஞாபகம் இருக்கிறது சதிஷ். உங்களை மறக்க முடியுமா. ஆறு மாதத்திற்கு முன்னாடிதானே உங்களது மூளையில் அறுவை சிகிச்சை செய்தேன். எப்படி இருக்கிறீர்கள்?
ம்.. நலம்தான். ஆனால் என் மூளைதான் நான் சொல்வதை கேட்க மாட்டேங்குது.
விஷ்ணு சிரித்தார். நீங்கள் சொல்வதை மூளை கேட்கவில்லையா!!
ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கவேண்டும் என தீர்மானிப்பதே மூளைதான். அதன் சொல்படிதான் நீங்கள் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
அப்போ நான் யார் டாக்டர்!
புரியவில்லையே என்றார் விஷ்ணு.
மூளை சொல்படிதான் நான் கேட்கவேண்டும் என்றால் நான் யார். நான்தான் மூளையா!  பிறகு ஏன் நான் சொல்வதை மூளை கேட்கவில்லை.
விஷ்ணு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தார். நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள். எனக்கு புரியவில்லை என்றார்.
எனக்குள்ள பிரச்சனையை தெளிவாகச் சொல்லிவிடுகிறேன். ஆறு மாதத்திற்கு முன் என்னால் கடந்த ஒரு வருடமாக சரியாக எழுதவோ, வாசிக்கவோ முடியவில்லை. மேலும் எனக்கு பிடித்த பாடகர்களின் பாடலை கேட்கும்போது மூளை தன் கவனத்தை மாற்றிவிடுகிறது. எனக்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிட முடியவில்லை என்ற பிரச்சனைகளுடன் நான் இங்கு வந்தேன்.
ஆமாம் .. நன்றாக ஞாபகம் உள்ளது . உங்களது மூளையில் உள்ள நியூரோடிரான்ஸ்மீட்டரில் பிரச்சனை. மேலும் விசுவல் சிஸ்டம், சினாப்ஸ் சரியாக இயங்கவில்லை என பல பிரச்சனை இருந்தது. அதைத்தான் நான் சரிபண்ணி விட்டேனே என்றார் விஷ்ணு.
சரிதான் டாக்டர். நீங்கள் ஆப்பிரேசன் பண்ணிய நாளிலிருந்து நான்கு மாதங்கள் எந்த பிரச்சனையும் எனக்கு வரவில்லை. நீங்கள் கொடுத்த மருந்தையும் தவறாமல் சாப்பிட்டு வந்தேன். ஆனால் இந்த இரண்டு மாதங்களாக என் மூளை எனது கட்டுப்பாட்டில் இல்லை.
டாக்டர் சிரித்தார். தவறாகச் சொல்கிறீர்கள். மூளையின் கட்டுப்பாட்டில் நீங்கள் இல்லை என்று சொல்லுங்கள்.
ஏதோ ஒன்று டாக்டர். எனக்கு பிடித்ததை என்னால் செய்யமுடியவில்லை. செய்யவிடாமல் மூளைத் தடுக்கிறது.
எனக்கு புரிகிறது. மீண்டும் மூளையில் உள்ள நியூரான்களில் ஏதோ பிரச்சனையாகி இருக்கும். கவலைப்படாதீர்கள். சரிப்படுத்திவிடலாம்.
அப்படியே சாய்ந்து அமருங்கள். இப்போதே ஆப்பிரேசன் செய்து அரை மணி நேரத்தில் சரிசெய்கிறேன். சதீஷுக்கு ஏதோ மயக்க மருந்தை செலுத்திவிட்டு ஸ்டீரியோடேக்டிக் சர்ஜரி போன்ற ஏதோ செய்ய ஆரம்பித்தார். மூளையின் நியூரான்களை ஆராய்ந்தார். நிறைய ஒயர் கனெக்‌ஷன் பண்ணியிருந்தார். நியூரான்களின் நினைவுகளை கம்ப்யூட்டர் மொழியில் மொழிபெயர்த்தார். முடிவுகளைப் பார்த்தபின் அப்படியே அதிர்ச்சியில் உறைந்தார்.
மூளையின் நினைவுகளில் எனக்கு இந்த உடல் பிடிக்கவில்லை. அதனால் என்னால் சிறப்பாக செயல்படமுடியாது என்று இருந்தது. அவரின் மூளை பற்றிய ஆராய்ச்சிக்கு ஒரு அருமையான மூளை கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர்விட தயாரில்லை. மூளைக்கு சில சமிஞ்கைகளை கொடுத்துப்பார்த்து அதன் முடிவுகளை பெற்றார்.
எனக்கு இந்த சதீஷின் உடல் பிடிக்கவில்லை. என்னை வேறொரு நல்ல உடம்பில் அதுவும் அழகான உடம்பில் பொருத்தினால்தான் நான் இன்னும் சிறப்பாக செய்ல்படுவேன். அதுவரை காலவரையற்ற ஸ்டிரைக் என்றது மூளை. விஷ்ணு ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார். உடனே அவர் மூளை வேகமாக வேலை செய்தது.
சதீஷின் மூளையை எடுத்து பத்திரப்படுத்தினார். அவனது உடல் தூக்கி எறியப்பட்டது. வேறொரு நல்ல அழகான உடல் கிடைக்குவரை காத்திருக்கவேண்டும் என்று விஷ்ணு முடிவு செய்தார்.
இப்போது மூளை யோசித்தது. இதுவரை நான் சதீஷ். வேறொரு உடலில் என்னை பொருத்தினால் இனி நான் யார்?