சனி, ஆகஸ்ட் 31

மனசை அரித்தவள்

மனசு

ஒளிவெள்ளத்தில்
நிழல் வராது
இருப்பினும்
வருகின்ற திசையினை
நோக்கி தேடுகிறேன்
நேரம் செல்லச் செல்ல
இருட்டத்தொடங்கியது
அறிவு உரைத்தது
இருட்டிலும் நிழல்
வராது என்று..!

மனசு எதையாவது தேடிக்கொண்டே இருக்கிறது. தேடல் நல்லதுதான். அலைபாயும் கடலையும் மனசையும் கட்டுக்குள் கொண்டு வருவது இயலாத.. இயலவே இயலாத காரியம். இருந்தும் இருட்டில் திசையே அறியாத அவள் வரும் திசையினை நோக்கித் தேடுகிறது மனசு.


பிசாசு மனசு
எனக்கும் அவளுக்கும்
முருங்கை மரம்
ஏறவே அலைகிறது!

அவள் வரும்வரையில் கரையான் அரித்த சிறு புத்தகம் ஒன்றை எடுத்துப்படித்தேன். ஒவ்வொரு கவிதையும் முடிவுறும் இடங்களில் எல்லாம் ஓட்டை. முடிவு தெரியாமல் அலைக்கழிக்கப்பட்டு இறுதியில் புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன்.படித்த சில கவிதைகள் என்னை விரட்டின. கொஞ்சமல்ல ரொம்பவே அலைக்கழித்தது. மனசை மாற்ற நிலவை நோக்கினேன். பசித்தது...

நிலவை மென்று
தின்னத்தொடங்கினேன் 
மென்மையாக
மிகவும் மென்மையாக
கடித்து சுவைத்தேன்
அதன் சுவை எனக்கு
மட்டுமே தெரியும்
சுவையறியாதவர்கள்
சொல்வார்கள்
நிலவு குளிர்ச்சி
மட்டுமே கொண்டதென்று
நிலவு சுடவும் செய்யும்.

பசியாறியவுடன் மனசு மீண்டும் விழித்துக்கொண்டது. சின்ன சிலிர்ப்பை வெளிப்படுத்தியது. கொஞ்சம் பறக்கத்தொடங்கியது. பழையதை அசைபோட்டது. சூரியனை மெல்லும் மாட்டினை நான் கண்டிருக்கிறேன். வானம் பார்த்து வாய் அசைபோடும். இது மனசல்லவா! மெதுவாக அசைபோட்டது. மனசும் மாடும் ஒன்றுதானோ! மீண்டும் மீண்டும் அசைபோடுகிறது. முடிவற்ற அந்தக்கவிதைகள் என்னை மீண்டும் விரட்டின. மனசு பறந்தது. இப்போது அவளை மறந்த மனசு அந்த கவிதைகளுக்கு பயந்து தஞ்சம் தேடி ஓடியது. மற்றவை மறந்ததால் மனசு இலேசானது.

இரவுநேரத்து
பூச்சிகள்கூட
என்னைத்தூக்கிவிட
முடியும்
என் மனசு அவ்வளவு
இலேசானது.

அவளைத் தேடித்தேடிச்சோர்ந்த என் கண்கள் இறந்து கொண்டிருந்தது.   இப்போது கரையான்கள் என்னை அரிக்கத்தொடங்கியிருந்தது.என் உடம்பை அரித்த சில கரையான்கள் மூக்கினை மூடிக்கொண்டது. வீச்சம் எடுத்த உடம்பு. ஆனால் மனசு பரிசுத்தமானது. மனசில் நீ மட்டுமே இருப்பதால். என் ஆழமான அன்பு என்றும்.. என்றென்றும் உன் மீது இருக்கும்.கரையான்கள் என் உடம்பை அரித்தாலும் என் மனசை எதுவும் அரிக்க இயலாது. மனசை அரித்தவள் நீயல்லவா!

மனசு

விரட்டிக்கொண்டிருந்த
கவிதைகள்
அரிக்கப்பட்ட
என் மனசைவிட்டு
விலகிச்சென்றது
இனி கவிதையும் வராது 
இறந்த என் கண்களில்
கண்ணீரும் வராது..!

7 கருத்துகள்:

  1. இரவுநேரத்து
    பூச்சிகள்கூட
    என்னைத்தூக்கிவிட
    முடியும்
    என் மனசு அவ்வளவு
    இலேசானது.

    வெகுவாய் ரசித்தேன்..

    பதிலளிநீக்கு
  2. திரு விமலன் மூலம்
    தங்கள் தளம்
    எனக்கு
    அறிமுகம்
    இனி வருவேன்
    தொடர்வேன்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சார்.தங்களது வலைப்பக்கத்தை வலைச்சரத்தில் அறிமுகம்செய்துள்ளேன்.படித்துப்பார்த்து விட்டு கருத்துக்கூறவும்/

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா19 அக்டோபர், 2013

    azhagu...arumaiyana varigal

    பதிலளிநீக்கு