வியாழன், ஆகஸ்ட் 15

வெறுப்பாய்...

      என்னையே எனக்கு பிடிக்காதபோது மற்றவர்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனதில் எனக்கு ஆச்சரியமொன்றுமில்லை. உலகத்தில் வெறுப்பு என்ற ஒன்று நிரந்தரமாகத் தங்கிப்போனது. தமக்கு பிடிக்காத ஏதோ ஒன்றின்மீது வெறுப்பு வருவது இயற்கைதான். அது உயிர்களிடத்தில் வரும்போதுதான் அதுவும் மனது என்ற ஒன்றைக்கொண்டிருக்கும் மனிதர்களிடத்தில் வரும்போதுதான் வெறுப்பின்மீது வெறுப்பு வருகிறது.


மனதினால்
நினைக்கும் ஆற்றல்
பெற்றதால்
மனிதனாகிறான்..!


            சிலருக்கு கல்மனசு என்பார்கள். அவர்களிடத்தில் அன்பு என்ற ஒன்று இல்லாமலில்லை. அதை வெளிக்காட்ட பயம், தயக்கம், கோபம், இயலாமை ஏதோ ஒன்று தடுக்கிறது. கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு. சிலர் எல்லோரிடமும் வெறுப்பு கொண்டிருப்பர். மனதிற்குள் விருப்பம் இருப்பினும் வெறுப்புதான் மேலோங்கி இருக்கும்.

வெறுப்பும் எனக்குப் பிடிக்கிறது
என் மனக்குதிரைக்கு
நீ கடிவாளம் போட்டதால்...!


மனசும்...
மனசும்...
சேர்ந்தபின்னும்
மனசுதான்
பிரிக்கிறது..!

          மரணப்படுக்கையிலும் வெறுப்பு இருக்கும். சிலநேரங்களில் கோபம்தான் வெறுப்பாகிறது. வெறுப்பு என்பது விஷம் போன்றது. அது தான் குடித்தாலும் அடுத்தவர்களுக்கு கொடுத்தாலும் அழிவு நிச்சயம்.ஒருவர் செய்யும் தவற்றினால் அந்த குடும்பத்தையோ,சமூகத்தையோ  அல்லது இனத்தையோ வெறுப்பதுதான் சோகத்தின் உச்சம். 


உலகத்தின் 
ஒட்டுமொத்த வலியையும் உணர்கிறேன்
உன் வெறுப்பால்...
நீ வெறுத்த
அனைத்தையும் நானும் வெறுக்கிறேன்
என்னையும் சேர்த்துதான்..!

    சிலநேரங்களில் வெறுப்பும் நம்மை அழகான உலகத்திற்கு அழைத்துச்செல்லும். நம் மேனியை வெறுக்க கற்றுக்கொண்டால் இறப்பு வரும்போது நிச்சயம் சந்தோசம்தான் இருக்கும்.இப்போதெல்லாம் வெறுப்பின்மீது விருப்பம்தான். தயவுசெய்து என்னையும் வெறுத்துவிடுங்கள்.



வெறுப்பும் எனக்கு பிடிக்கிறது
நீ
மட்டுமே என்னை வெறுப்பதால்..!

4 கருத்துகள்:

  1. வெறுப்பு மீது மிகவும் அருமையான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  2. வெருப்பின் மீது வெறுப்பு வருவதுவே நல்லதாய்/

    பதிலளிநீக்கு
  3. வெறுப்பு கவிதைகள் அருமை ! கவிதை தான் வெறுப்பு எழுதியவரை வெறுக்க முடியாது எப்படி !

    பதிலளிநீக்கு
  4. மனசும் மனசும். சேரந்த பின் மனசு தான் பிரிக்கிறது......செம விச்சு சர்

    பதிலளிநீக்கு