வியாழன், ஜனவரி 17

பூ..காய்..பருத்தி

”நல்லவேளை
பரிமாறும்போதே
பசியாறிவிட்டேன்”

          இத்தனை நாள் ஒழுங்காய்தானே இருந்தான். எங்கிருந்து வந்தது இந்த காதலும், கத்தரிக்காயும். அப்பாவின் கைபிடித்துக்கொண்டுதான் அலைவான். அப்பாதான் அவனுக்கு எல்லாமும்... அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் அப்பாதான். இப்போது அவனிடம் கேளுங்கள்.. உன்னுடைய முதல் எதிரி யாரென்று? நிச்சயம் அப்பாதான்.

”எந்த ஒளி பட்டால்
இந்த பூ பூக்கும்”

           அவளுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா அவளுக்கு தலையில் அழகாக ரெட்டை ஜடை பின்னி, சிவப்பு கலர் ரிப்பன் கட்டி, கனகாம்பரம் பூச்சூடி அழகு பார்ப்பாள். அம்மாதான் உலகம். அம்மாவிற்கு பிடித்த எல்லாமும் இவளுக்கும் பிடிக்கும். இப்போது அவளிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு பிடித்தது யாரென்று? நிச்சயம் அம்மா இல்லை.

மண்ணும் கருக்கொண்டது
மழைநீர் புகுந்ததால்!


        அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய சைவ நினைவுகள் அசைவமாக மாறிக்கொண்டிருந்தன. திமிர் பிடித்த கரையானாய் அவன் மனசை அரித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கேட்டுவிடவேண்டும். நீ என்னை காதலிக்கிறாயா? கண்ணாடி முன்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
   
”பறந்துவந்த ஒரு
அசைவ விமானம்
கொத்தத்தொடங்கின
அவள் இதயத்தை”

       இவன் எல்லோரையும் போல்தான் சைக்கிள் ஓட்டுகிறான். பிறகு ஏன் இவன் மட்டும் என் மனதில் புகுந்தான். ஒருவேளை பறக்கிறானோ! மனப்பிரமையா? அவளாக மனதில் கேட்டுக்கொண்டாள். இவள் சைக்கிளை உரசியபடி வேகமாகப் பறந்துசெல்வான். திடீரென மனசையும் உரசிச்சென்றுவிட்டான்.

“சத்தியமாக
இயல்பாகத்தான் இருக்கிறேன்
பலதடவை சொல்லிக்கொண்டான்
சொரணையில்லாமல்”

       குளியலறைக்குள் புகுந்துகொண்டால் பச்சைத் தண்ணீர் சுடுதண்ணீர் ஆகும்வரை குளித்தான். தலைமுடியை சீவ ஆரம்பித்தால் சீப்பு நுனி தேயும் வரை சீவிவிட்டு பின்பு முடிகலைத்துதான் செல்வான். சாப்பிட்டுவிட்டு பசிக்குது என்பான். இப்போதெல்லாம் ஆடையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். அவள் உடுத்தும் ஆடையின் நிறத்தில் அள்ளிக்குவித்தான்.
       
“ பால் கொதித்தது
ஆவியானான் அவன்”

        அவளுக்கு ஜன்னல் வீடானது. இப்போதெல்லாம் தலைகீழாகவே படிக்க ஆரம்பித்துவிட்டாள். வெறும் தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.  அடுப்பில் பாலை பொங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள். கண்கள் நிலைகுத்தி தன்நிலை மறந்தாள். பில்லி சூனியமோ என நினைத்து வீட்டில் பயந்தார்கள். அது  அந்த ஆண்பிள்ளையின் சூனியம்  என அறியாமலேயே!

”பழம் அழகுதான்
வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

“இதயம் வரைந்துகொண்டிருந்தேன்
ஒடிந்தது பென்சிலும்”
 
      இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

“நான் பார்த்தேன்
புள்ளியாய் நீ
அங்கிருந்து
நீயும் பார்
நானும் புள்ளிதான்”

செவ்வாய், ஜனவரி 8

காமெடி காதல்


உன்னை பீச்சுக்கு அழைத்தேன்
வரமறுத்தாய்
கோவிலுக்கு அழைத்தேன்
உடனே வந்தாய்
அப்புறம்தான் தெரிந்தது
ஒருவாய் சுண்டலுக்கு என்றாய்
நீ என்னையே உற்றுப்பார்த்தாய்
வெட்கமாய் இருந்தது
அப்புறம்தான் தெரிந்தது
நீ பார்த்தது
என் சம்பள கவரை என்று
ஜவுளிக்கடை அழைத்தாய்
சந்தோசமாக வந்தேன்
எனக்கு முந்நூறு ரூபாய் சட்டை
இன்னும் சந்தோசப்பட்டேன்
உனக்கு ஐயாயிரம் ரூபாய் புடவை
பில்லை மட்டும் என்னிடம் கொடுத்தாய்
மெலிந்துபோய் இருக்கிறாய்
நன்றாக சாப்பிடு என்றாய்
என்ன ஒரு அக்கறை என நினைத்தேன்
உணவகம் அழைத்து சென்று
வாயில்வராத பெயரை எல்லாம் சொல்லி
ஆர்டர் செய்தாய்
எனக்கு ஒரு தட்டும் நீ முப்பது
தட்டுமாய் தின்னு தீர்த்தாய்
என் சம்பள கவர் இன்னும் மெலிந்தது
நீ இன்னும் பருத்தாய்
இறுதியாக சொன்னாய்
நான் லவ்வுவது உன்னையல்ல
உன் நண்பனை என்று
அவனை பழிவாங்க நினைத்தேன்
நல்லபடியாகவே நடந்தது
நானும் சொன்னேன் நான் லவ்வியது
உன்னையல்ல
உன் தங்கைகளை என்று!

இறுதிப்பயணம்


அதிகாலை நேரம்

கதிரவனின் கதிர்கள்
சிறகை விரித்து வெப்பம் பரப்பியது
முகவரி இல்லாத இடத்திற்கு
தனிமைப்பயணம் மேற்கொள்ள
ஆயத்தப்படுத்திக்கொண்டேன்
பயணத்திற்கு தேவையானவற்றை
தயார்செய்தேன்
எடுத்துச்செல்ல ஒன்றுமில்லைதான்
சில மாதங்கள் முன்பு
சுற்றுலா கிளம்பும் ஒரு வேளையில்
என் ஒல்லியான தேகத்தினை
கண்ணாடியில் பார்த்தபோது
மூக்கு கொஞ்சம் அளவாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
இன்னும் கொஞ்சம் குண்டாக
இருந்தால் நன்றாகயிருக்கும்
கொஞ்சம் சிவப்பாக 
இருந்திருக்கலாமோ என
எல்லாம் குறைகளாகவே தெரிந்தன
இப்போது எதைப்பற்றியும் யோசிக்கவே இல்லை
மதியம் தாண்டிவிட்டது
என்னை வழியனுப்ப பலர்
வெளியூரிலிருந்தும் வந்துவிட்டனர்
வீட்டைவிட்டு வெளியே வந்தேன்
சூரியனின் வெப்பம் 
தகிப்பது போல 
வந்தவர்கள் உணர்ந்தனர்
தெருவில் ஒரு பெண் அழுதுகொண்டிருந்தாள்
தன் காதலன் மறைந்துவிட்டதாக
ஒரு பெரியவரும் அழுதார்
தன் மகன் இறந்துவிட்டதாக
ஒரு சிறுமி அழுதாள்
தன் சித்தப்பா செத்துவிட்டதாக
ஒரு பாட்டி அழுதாள்
தனக்கு முன் பேரன் இறந்துவிட்டதாக
எல்லாம் ஒருவர்தான்
முகமூடிகள்தான் வேறு
பயணத்தினை தொடர்ந்தேன்
கூடவே சிலர் வந்தனர்
செத்ததூரம் துணைக்கு
வருவதாகக் கூறினர்
சிலர் அழுவதும் 
பலர் மனதுக்குள்
சந்தோசப்படுவதுமாக இருந்தனர்
காதலனை இழந்த பெண்
மட்டும் உயிரைக்கொடுத்து
அழுதுகொண்டிருந்தாள்
யாரும் சட்டை செய்யவில்லை
வழியில் மணக்கோலத்தில்
ஒரு ஊர்வலம்
என்னைப்பார்த்ததும் திகைத்து
ஒதுங்கி வழிவிட்டனர்
மணமகனும் மணமகளும் 
சந்தோஷத்தில் திளைத்தனர்
பலர் வியர்வை வழிய வழிய
என் உடன் வந்தனர்
என்னை மகிழ்ச்சியாக்க 
முயன்று தோற்றனர்
மலர் தூவியும்
சத்தங்கள் எழுப்பியும்
வெடிபோட்டும் வந்தனர்
மாலைநேரம்
சூரியன் ஓய்வெடுக்கவும்
நிலவு தன் பணியைத் 
தொடரவும் தயாராகியது
நேரமாகிவிட்டது
என சிலர் அவசரப்படுத்தினர்
ஒவ்வொருவரும் 
பரபரப்பாக அவரவர் 
வேலையில் இயங்கினர்
இரவு கருப்பு நிறத்தை 
தன்மேல் பூசிக்கொண்டது
நிலவு யாருக்காகவோ
ஒளிபாய்ச்ச தொடங்கியிருந்தது
எப்போதும்போலவே
மிகவும் குளிர்ச்சியாக இருந்தது
பின்பு பிரயாணக்களைப்பில்
எனக்கான இடத்தில் படுத்துக்கொண்டேன்
சுத்தமாக இருட்டியிருந்தது
காற்றும் இன்னபிற
சத்தங்களும் அடங்கிவிட்டிருந்தன
வந்தவர்கள் நேரமாகிவிட்டது
எனப் புலம்பியபடியே
கிளம்பிவிட்டிருந்தனர்
தனிமையில் என் பயணத்தினைத்
தொடர்ந்தேன் இனிமையாகவே!

கடைசி பெஞ்ச் மாணவன்

கடவுள் உன்னை 
இலக்கணப்படிதான் படைத்துள்ளார்
இம்புட்டு அழகா!
நீயும் தமிழும் ஒன்றுதான்
மிக இனிமையாக

தயவு செய்து
ஆங்கிலத்தில் பேசாதே
உன் மனதைப்போலவே
எனக்கு எதுவும் புரியவில்லை

உன்னைக் கூட்டவும் முடியாமல்
கழிக்கவும் முடியாமல்
என் காதலில்
பெருத்துக்கொண்டே போகிறேன்
உன்னைப்பார்த்த நாளிலிருந்து
கணக்கில் நான் ஜீரோதான்

இதயத்தின் படம் வரைய
அறிவியல் ஆசிரியர்
கட்டளையிட்டார்
நான் உன்னை வரைந்து
கொண்டிருக்கிறேன்

புவியின் அமைப்பை போல
உன் உடலின் அமைப்பினை
கொஞ்சம் வரைந்து கொடு
இதயம் எங்குள்ளது
என அறிந்து கொள்வேன்

விரைந்து வா!
உன் தந்தை என்மீது
போர் தொடுக்கும்முன்
இருவரும் சேர்ந்து 

 நம் படைகளைப் பெருக்கி
புது வரலாறு படைக்கலாம்!