ஞாயிறு, ஜூன் 28

எனக்கு ஒரு டொக்கு

                         

                    ஒரு ஊரில் கத்தரிக்காய் அப்பாவும் மிளகாய் அம்மாவும் இருந்தனர். அவர்களுக்கு சுண்டைக்காய் பையன். அவன் ரொம்ப சுட்டிப்பையன். அவர்களுக்கு உள்ளங்கை அளவு நிலம் இருந்தது. அதில் திணை பயிரிட்டிருந்தனர். அதில் குருவி வந்து திணையை தின்றது. அதை விரட்ட கத்தரிக்காய் அப்பா சுண்டைக்காய் பையனை காவலுக்கு அனுப்பினார்.
         சுண்டைக்காய் பையனும் குருவியை ச்சூ.. ச்சூ... என்று விரட்டிப்பார்த்தான். குருவிகள் கண்டுகொள்ளாமல் உணவினைத் தின்றது. சுண்டைக்காய் பையனால் ஒன்றும் செய்ய இயலவில்லை. கடவுளிடம் வேண்டினான். கடவுள் வந்து அவன் கஷ்டத்தினை உணர்ந்து நீ யாருக்கு டொக்கு என்று சொல்கிறாயோ அவர்கள் தூங்கி விடுவார்கள் என்ற வரத்தினை கொடுத்து மறைந்துவிட்டார்.
                       வயலில் மேயும் குருவிகளைப்பார்த்து “எனது வயலில் மேயும் குருவிகளுக்கு ஒரு டொக்கு என்றான்” குருவிகள் அனைத்தும் தூங்கிவிட்டன. சந்தோசமாக வீட்டிற்கு வந்தான். மிளகாய் அம்மா மீன்குழம்பு சமைத்திருந்தார்கள். அவன் பசியுடன் அமர்ந்தான். புளிய மரத்தின் இலையில் ஒரு பருக்கையும் ஒரு சொட்டு மீன்குழம்பும் வைத்தார்கள். அவன் கோபமாகி எனக்கு மீன்குழம்பு நிறையவைக்காத கத்தரிக்காய் அப்பனுக்கும் மிளகாய் அம்மாவுக்கும் ஒரு டொக்கு என்றான். இருவரும் தூங்கிவிட்டனர்.
                          பசியுடன் வெளியே வந்தான். ஒரு கல்யாணவீட்டில் புகுந்து நிறைய சாப்பிட்டான். இவன் சாப்பிடும் அளவைப்பார்த்து பயந்து கல்யாணவீட்டினர் துரத்தினர். இவன் கோபமாக எனக்கு உணவு தராத கல்யாண வீட்டினருக்கு ஒரு டொக்கு என்றான். கல்யாண வீட்டில் அனைவரும் தூங்கிவிட்டனர். மணப்பெண் மணமகன் காலடியிலேயே விழுந்து தூங்கிவிட்டாள். பாவம் இப்படி காலில் விழுந்தால்தான் உண்டு.
                       நிறைய உணவு உண்டதால் வயிறு பெரிதாகி உருண்டு உருண்டு வந்தான். ஒரு பள்ளத்தில் விழுந்து மாட்டிக்கொண்டான். ஒரு பெரியவர் அந்த வழியாக வந்தார். அவரிடம் காப்பாற்றும்படி கேட்டான். அவர் காதில் வாங்கவில்லை. என்னைக் காப்பாற்றாமல் போகும் மொட்டைத் தாத்தாவுக்கு ஒரு டொக்கு என்றான். அவரும் தூங்கிவிட்டார். கஷ்டப்பட்டு பள்ளத்தில் இருந்து வெளியே வந்து ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. எல்லோரையும் டொக்கு சொல்லி தூங்கவைத்து விட்டோம். எனக்கு சொன்னால் என்னவாகும் என நினைத்துப்பார்த்தான். எனக்கு ஒரு டொக்கு என்றான். சுண்டைக்காய் பையனும் தூங்கிவிட்டான்.
                   இந்தக்கதையை நீங்கள் ரசித்து படித்திருந்தால் பதினைந்து வயது குறைந்து விடுமாம். நான் இரண்டு தடவை ரசித்துப் படித்ததால் இப்போது தொட்டிலில் தூங்கும் அளவுக்கு வயது குறைந்துவிட்டது. கதையை ரசித்து படிக்காதவர்களுக்கு ஒரு டொக்கு....