வியாழன், ஜனவரி 17

பூ..காய்..பருத்தி

”நல்லவேளை
பரிமாறும்போதே
பசியாறிவிட்டேன்”

          இத்தனை நாள் ஒழுங்காய்தானே இருந்தான். எங்கிருந்து வந்தது இந்த காதலும், கத்தரிக்காயும். அப்பாவின் கைபிடித்துக்கொண்டுதான் அலைவான். அப்பாதான் அவனுக்கு எல்லாமும்... அவனுக்கு இருக்கும் ஒரே நண்பன் அப்பாதான். இப்போது அவனிடம் கேளுங்கள்.. உன்னுடைய முதல் எதிரி யாரென்று? நிச்சயம் அப்பாதான்.

”எந்த ஒளி பட்டால்
இந்த பூ பூக்கும்”

           அவளுக்கு எல்லாமே அம்மாதான். அம்மா அவளுக்கு தலையில் அழகாக ரெட்டை ஜடை பின்னி, சிவப்பு கலர் ரிப்பன் கட்டி, கனகாம்பரம் பூச்சூடி அழகு பார்ப்பாள். அம்மாதான் உலகம். அம்மாவிற்கு பிடித்த எல்லாமும் இவளுக்கும் பிடிக்கும். இப்போது அவளிடம் கேட்டுப்பாருங்கள். உனக்கு பிடித்தது யாரென்று? நிச்சயம் அம்மா இல்லை.

மண்ணும் கருக்கொண்டது
மழைநீர் புகுந்ததால்!


        அவளின் நினைவுகள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய சைவ நினைவுகள் அசைவமாக மாறிக்கொண்டிருந்தன. திமிர் பிடித்த கரையானாய் அவன் மனசை அரித்துக்கொண்டிருந்தது. எப்படியாவது கேட்டுவிடவேண்டும். நீ என்னை காதலிக்கிறாயா? கண்ணாடி முன்தான் கேட்டுக்கொள்ள முடிந்தது.
   
”பறந்துவந்த ஒரு
அசைவ விமானம்
கொத்தத்தொடங்கின
அவள் இதயத்தை”

       இவன் எல்லோரையும் போல்தான் சைக்கிள் ஓட்டுகிறான். பிறகு ஏன் இவன் மட்டும் என் மனதில் புகுந்தான். ஒருவேளை பறக்கிறானோ! மனப்பிரமையா? அவளாக மனதில் கேட்டுக்கொண்டாள். இவள் சைக்கிளை உரசியபடி வேகமாகப் பறந்துசெல்வான். திடீரென மனசையும் உரசிச்சென்றுவிட்டான்.

“சத்தியமாக
இயல்பாகத்தான் இருக்கிறேன்
பலதடவை சொல்லிக்கொண்டான்
சொரணையில்லாமல்”

       குளியலறைக்குள் புகுந்துகொண்டால் பச்சைத் தண்ணீர் சுடுதண்ணீர் ஆகும்வரை குளித்தான். தலைமுடியை சீவ ஆரம்பித்தால் சீப்பு நுனி தேயும் வரை சீவிவிட்டு பின்பு முடிகலைத்துதான் செல்வான். சாப்பிட்டுவிட்டு பசிக்குது என்பான். இப்போதெல்லாம் ஆடையில் அதிக அக்கறை எடுத்துக்கொண்டான். அவள் உடுத்தும் ஆடையின் நிறத்தில் அள்ளிக்குவித்தான்.
       
“ பால் கொதித்தது
ஆவியானான் அவன்”

        அவளுக்கு ஜன்னல் வீடானது. இப்போதெல்லாம் தலைகீழாகவே படிக்க ஆரம்பித்துவிட்டாள். வெறும் தட்டில் சாப்பிட ஆரம்பித்தாள்.  அடுப்பில் பாலை பொங்கவிட்டு வேடிக்கை பார்த்தாள். கண்கள் நிலைகுத்தி தன்நிலை மறந்தாள். பில்லி சூனியமோ என நினைத்து வீட்டில் பயந்தார்கள். அது  அந்த ஆண்பிள்ளையின் சூனியம்  என அறியாமலேயே!

”பழம் அழகுதான்
வண்டுதான் குடைந்துகொண்டிருந்தது”

இருவரும் மனசைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்தார்கள். வாழ்க்கை அவர்களை தொலைத்துவிட்டிருந்தது.

“இதயம் வரைந்துகொண்டிருந்தேன்
ஒடிந்தது பென்சிலும்”
 
      இருவருக்கும் மதிப்பெண் குறைந்தது. வீட்டில் காது நிறைந்து வழியும்படி திட்டு விழுந்தது. பள்ளி சரியில்லை, ஆசிரியர் சரியில்லை, நண்பர்கள் சரியில்லை, நேரம் சரியில்லை, ஊரே சரியில்லை என்று பலவாறு சிந்தித்தனர் அவன் வீட்டாரும், அவள் வீட்டாரும். அவர்களுக்கு யார் சொல்வது? இருவருக்கும் ஹார்மோன் சரியில்லை என்று.

“நான் பார்த்தேன்
புள்ளியாய் நீ
அங்கிருந்து
நீயும் பார்
நானும் புள்ளிதான்”