வியாழன், ஏப்ரல் 10

வேப்பமரத்தின் மனம்

    ப்ஊ.. ப்ஊ... தூசியை வாயால் ஊதினேன். அப்பப்ப்ப்பா.. மேஜையில் எவ்வளவு தூசு. ஒருவழியாக சுத்தம் செய்தபின் மேஜையையும் நாற்காலியையும் இழுத்துப்போட்டு அமர்ந்தேன்.
ஜன்னலின் ஓரம் அமர்ந்து கவிதை எழுதுவது எனக்கு பிடித்தமான ஒன்று.
கவிதையா..! 
என்று புருவம் உயர்த்துவது தெரிகிறது.
கவிதை மாதிரி ஏதோ எழுதிக்கொண்டிருந்தேன் என்று வைத்துக்கொள்ளுங்கள்.

வேப்பமரத்தின் ஒரு சிறிய கிளை ஜன்னலின் அருகே என்னையே உற்று பார்ப்பதுபோல் இருந்தது. அதை சட்டை செய்யாமல் எழுதினேன். மீண்டும் மனசுக்குள் ஒரு உறுத்தல். என்னைத்தான் பார்க்குமோ என்று சற்று நிமிர்ந்து பார்த்தேன். தலையைத் திருப்பிக்கொண்டது.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மீண்டும் எழுதத்துவங்கினேன். இப்போது மெல்லிய குரலில் சத்தம் கேட்டது. 
யாரது? என்பதுபோல் நிமிர்ந்து பார்த்தேன். 
மரமேதான்... ஆச்சரியம் மேலிட என்ன என்று புருவம் உயர்த்தினேன்.
எப்போது பார்த்தாலும் எழுதுகிறாயே..! அப்படி என்னதான் எழுதுவாய் என்று கேட்டது.
என் தனிமையை போக்கவும், எனக்குள் தோன்றும் சில கருத்துக்களையும் எழுதுவேன் என்றேன்.
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்ற வேப்பமரம்..
நீ கருக்கொண்டிருப்பாயோ!
இத்தனை வார்த்தைகள்
உனக்குள் பிறக்கின்றன.
என்று கூறியது.
வேப்பமரத்தின் பேச்சு எனக்கு வியப்பினை தந்தது.
என் மனதில் வார்த்தைகள் ஊறிக்கொண்டிருக்கும் என்றேன்.
உடனே அது மனத்தினை எப்போதும் குப்பைபோல நிறைத்திருப்பாயோ என்று கேட்டது.
எனக்கு பதில் சொல்லத்தெரியவில்லை.
காலியான மனம் ஒன்று உண்டா? என்று கேட்டது.
கண்டிப்பாக இருக்க முடியாது என்றேன்.
அது சிரித்தபடியே பொருட்களை வாங்கி வீட்டினை நிரப்புகிறீர்கள். சொற்களை வாங்கி மனசை நிரப்புகிறீர்கள் என்றது.
எண்ணங்களும் மனசை நிரப்பும் என்றேன்.
எதை எண்ணுவீர்கள்?
காதலி, குடும்பம், ஊர், வேலை பார்க்கும் இடம், அன்றாட நிகழ்வுகள் இப்படி எதையாவது எண்ணுவேன். மனம் எப்போதும் எதையாவது அசைபோட்டுக்கொண்டு இருக்கும்.
நடந்தவை
நடந்துகொண்டிருப்பவை
நடக்கப்போகின்றவை
யோசித்துக்கொண்டேயிருக்கும்
மனம்.
அதற்கு ஓய்வில்லை என்று சொன்னவுடன்…
வேப்பமரம் ஆமோதிப்பதுபோல் கிளையை அசைத்தது.
மனிதன் மட்டுமே இப்படி மனசை உலட்டியபடி அலைகிறான். அவனுக்குள் எப்போதும் திராவகம்போல் எண்ணங்கள் அரித்துக்கொண்டே இருக்கவேண்டும். மனம் வெறுமையாய் இருந்தால் அவன் இறந்துபோய்விடுவான். அவன் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம் மனம் மட்டுமே என்றது.
வெறுமையான மனம் என்று ஒன்று கிடையாது. மனிதர்கள் குப்பைகள் என்றது.
நான் என்னுடைய எண்ணங்களை இலைகளாக முளைக்கச்செய்து, தேவையில்லாதவற்றை உதிரச்செய்வேன் என்றது. நாங்கள் அதனால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.
நீங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக்கி மனசுக்குள் புதைத்துவைக்கிறீர்கள். அவை கை கால்களுடன் முளைத்துக்கொண்டே இருக்கின்றன என்று சொல்லிக்கொண்டிருந்தது.
அப்போது ஓங்கி வீசிய காற்றில் அந்தக்கிளை முறிந்து விழுந்தது.
நான் அமைதியானேன்.
மனம் மீண்டும் யோசிக்கத்தொடங்கியது.