சனி, பிப்ரவரி 16

நானும் ஆவிதான்


      என்னுடைய பிரச்சனையைத் தீர்க்க மருத்துவரிடம் சென்றுதான் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன். விசாரித்துப் பார்த்ததில் டாக்டர் ஆவிதாசன்தான் சிறந்த மருத்துவர் என எல்லோரும் கூறினர். அவருடைய பெயரே வித்தியாசமாக இருந்தது. அவர்தான் ஆவிகளுடன் பேசுபவராம். இரவு எட்டு மணிக்கு அவருடைய மருத்துவமனைக்குச் சென்றேன். மருத்துவமனையைச் சுற்றிலும் புகைமண்டலமாக இருந்தது. எனக்கு மட்டும்தான் இப்படி தெரிகிறதா ! யோசித்தவாறே சென்றேன்.
     மருத்துவர் என்னை அழைத்து இருக்கையில் அமரவைத்தார்.
    " உங்களுக்கு என்ன பிரச்சனை?" டாக்டர் விசாரித்தார்.
     எனக்கு சில வாரங்களாக எல்லாமே வித்தியாசமாக இருக்கிறது.
     என்ன வித்தியாசம்?
     யாரைப்பார்த்தாலும் பேய் மாதிரி தெரிகிறது. பல் நீண்டும், முடியை விரித்துப் போட்டவாரும் தெரிகிறது. எங்குபார்த்தாலும் புகை மண்டலமாக இருக்கிறது.

         எப்போதிருந்து?
     இரண்டு வாரத்திற்குமுன் டூவீலரில் செல்லும்போது கீழே விழுந்துவிட்டேன். தலையில் அடிபட்டது. அப்போதிருந்துதான்…
ஓ! அப்போ இது சாதாரண பிரச்சனைதான்.
     “சாதாரண பிரச்சனையா !” என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால்தான் உங்களுக்கு இந்த பிரச்சனையின் வீரியம் புரியும்.
      சரி...! வேறெதாவது உங்களுக்கு வித்தியாசமாகத் தோணுகிறதா?
    ஆமாம்.. முருங்கை மரத்தினைப்பார்த்தால் தொங்கவேண்டும்போல் உள்ளது. யாரையாவது பிடித்து ஆட்டவேண்டும்போல் இருக்கிறது. எதுவும் சாப்பிட பிடிக்கவில்லை. சிலநேரம் ரத்தம் குடிக்கவேண்டும்போல் உள்ளது. இப்போது உங்களைப் பார்த்தால்கூட ஆவி மாதிரிதான் தெரிகிறது.
      டாக்டர் சிரித்தார்.
      சார்.. நான் சீரியசா பேசிக்கிட்டு இருக்கேன்.. நீங்க சிரிக்கிறீங்க !
      “வீட்டிற்கு போக பிடிக்காதே?” டாக்டர் அன்பாக விசாரித்தார்.
      அட! ”ஆமாம் சார்” என்றேன்.
      சுடுகாட்டுக்கு இப்போ தனியா பயமில்லாமல் போவீங்களே?
      ஆமாம்..ஆமாம்.. இதுக்கு என்ன சார் ட்ரீட்மெண்ட்? சரியாயிடுமா?
    இதுக்கு மருந்து மாத்திரை எதுவும் தேவையில்லை. இது நார்மல்தான்..
    என்னது நார்மலா!
    ஆமாம் ஆவியா இருந்தால் இது நார்மல்தானே.. மனிதர்கள்தான் பயப்படுவார்கள்.
    “ஆவியா? நானா?” ஆச்சரியமாகவும் பயத்துடனும் கேட்டேன்.
    ஆமாம்.. நீங்கள் தலையில் அடிபட்டு இறந்துவிட்டீர்கள். இப்போது ஆவிகள் உலகத்தில் இருக்கிறீர்கள்.
     அப்போ நீங்கள் மட்டும் எப்படி இங்கே? ஆவிகளுடன் பேசுகிறீர்கள்...
    ஹாஹா....ஹா.. என சிரித்துக்கொண்டே சொன்னார். நானும் ஆவிதான். புதிதாக ஆவிகள் உலகத்திற்கு வருபவர்களுக்கு இதுதான் பிரச்சனை. அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கத்தான் இந்த டாக்டர் ஆவிதாசன்.
     ஆவி அரண்டு போய் அமர்ந்து இருந்தது.