வியாழன், நவம்பர் 27

கையளவு நீர்

                   
ஸ்ஸ்ஸ்ஸ்... அப்பாடா! கொளுத்தும் வெயிலில் வெளியில் அலைந்துவிட்டு வீட்டில் நுழைந்து நாற்காலியை இழுத்துப்போட்டு அதில் அமர்ந்தேன். முன்னாடி மேஜையில் அன்றைய நாளிதழ் கிடந்தது. எடுத்து வழக்கம்போல் தலைப்புச்செய்தியாக வாசித்தேன். வழக்கமான செய்திகள்தான். மேஜையில் சின்ன டம்ளரில் நீர் இருந்தது. யாரும் அருந்திவிட்டு மீதம் வைத்திருந்தார்களா எனத் தெரியவில்லை. எடுத்து அருந்தலாமா என யோசித்தேன்.
                   அப்போது மெலிதாக சிரிப்பு சத்தம் கேட்டது. யாரென்று சுற்றும் முற்றும் பார்த்தேன்.  டம்ளரில் உள்ள நீர்தான் சிரித்தது. எனக்கு பயமாகிவிட்டது. பேய் ஏதாவது பிடித்திருக்குமோ என்று. சின்ன வயதில் அம்மா வெளி அறையிலிருந்து உள்ளே போய் கொஞ்சம் சொம்பில் தண்ணீர் கொண்டு வாடா என்றால்... முடியாது என்று மறுத்துவிடுவேன். உள் அறைக்குத் தனியாக சென்றால் பேய் பிடித்துக்கொள்ளும் என்ற பயம். நான்காம் வகுப்பு படிக்கும்போது யாருமில்லா ஒரு மதியப்பொழுதில் டவுசர் மாத்துவதற்காக கொடியில் கிடந்த டவுசரை எட்டி எடுத்தேன். அப்போது கிரீச் என்ற சத்தம். எங்கிருந்து வந்தது எனத்தெரியவில்லை. அலறியடித்து வாசலில் வந்து நின்றுகொண்டேன். பக்கத்துவீட்டு மாமா என்னடா.. அம்மணமா நிக்குற என்ற விசாரிப்பில் எனக்கு சின்னதாக ஒரு அவமானம்தான். இல்ல மாமா  டவுசர் கொடியில் கிடக்குது... எனக்கு எட்டல என்றேன். அவர் வந்து எடுத்துக்கொடுத்தார். உடனே டவுசரை மாட்டிக்கொண்டு வெளியில் ஓடிவந்துவிட்டேன். அந்த சத்தம் எனக்குள் இன்னும் ஒலிக்கிறது . பேயை நினைத்து பயந்ததுதான் காரணம்.
                      அப்புறம்  சூரியன் மறையும் ஒரு மாலைப்பொழுதில் மக்காச்சோளத்துக்காக காவல் காக்கும்போது ஏதோ சத்தம் கேட்டதற்காக பயந்து நடுங்கியிருக்கிறேன். பேயை நினைத்து பயந்துகொண்டிருக்கும் காலம் மாறவே இல்லை.
                    நண்பனின் அம்மா இறந்த அன்று நல்லமழை. மயானத்தில் சடலம் எரிந்துவிட்டதா என்று பார்ப்பதற்காக நாலைந்துபேர் சென்றார்கள். அவர்களுடன் நானும் மயானத்திற்கு சென்று அரைகுறையாக எரிந்த சடலத்தைப்பார்த்து பயப்படாத மாதிரி காட்டிக்கொண்டேன். உள்ளூர நடுங்கியது வேறுவிசயம். மயானத்திற்கு சென்றுவந்த வீரக்கதையை நீண்டநாட்களாக  நண்பர்களிடம் சொல்லி நானும் வீரமானவன்தான் பேய்க்கு பயப்படாதவன் எனக்காட்டிக்கொண்டேன்.
                    இப்போதுவரை பேயை பார்த்தது இல்லை. ஆனால் பேயை நினைத்து மனதில்  ஏற்படும் பயம் இன்றுவரை மாறவில்லை. இது இப்படி இருக்க திடீரென யாருமற்ற அறையில் சிரிப்பு சத்தம் கேட்டால் பயப்படாமல் இருக்க முடியுமா! டம்ளரில் இருக்கும் நீர் நான்தான் சிரித்தேன் என்றவுடன் பயத்தைவிட ஆச்சரியம்தான் அதிகமாகியது. நானில்லாமல் நீங்கள் இருக்கமுடியாது என்று தலைக்கனத்துடன் பேச ஆரம்பித்தது. நான் பூமியில் ஏறத்தாழ 2/3 மடங்கு இருக்கிறேன் என்று இருமாப்பு காட்டியது. எல்லோரும் என்னை நீர் என்று மரியாதையுடன் அழைப்பார்கள் என்று இன்னும் அகம்பாவத்துடன் கூறியது.
                 நானும் பொறுமையாக கேட்டுக்கொண்டு ஆமாம்! நீர் இல்லாமல் எங்களால் இருக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் உன்னை பயன்படுத்தத்தான் எங்களைப்போன்ற உயிர்களை கடவுள் படைத்தார் என்றேன். அது வாய்விட்டு சிரித்தது. நாங்கள் இல்லாத இடமே இல்லை. ஆறு, குளம், ஏரி, கிணறு, கடல் என்று எங்கும் வியாபித்திருப்போம். மழை பெய்யவில்லையென்றால் விவசாயம் பொய்த்து மனிதர்கள் இறக்கவேண்டிவரும் என்று அகம்பாவம் குறையாமல் கூறியது.
                 இவ்வளவு அகம்பாவத்துடன் பேசுகிறாயே.. நீ நல்லவர்களுடன் மட்டும் சேராமல் கெட்டவர்களுடனும் சேருகிறாய். யாருடனும் எளிதில் கலந்துவிடுகிறாய் என்றேன். அது என்னுடைய இயல்பு என்று நீர் கூறியது. எனக்கு எல்லோரும் ஒன்றுதான். எல்லோரும் எனக்கு கீழ்தான். நான்தான் உயர்ந்தவன் என்றது. நான் பொறுமையில்லாமல் அதன் கர்வத்தை அடக்க படக்கென்று டம்ளரை எடுத்து நீரை அருந்திவிட்டேன். 
                     இப்போது டம்ளர் சிரித்தது. நீ எதற்கு சிரிக்கிறாய் என்று வெறுப்புடன் கேட்டேன். மனித மனத்தை நினைத்து சிரித்தேன் என்றது. எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்றது.  எந்த ஒரு உயிரினமும்  பாத்திரத்திற்குள் நீரை அடக்குவதில்லை. மனிதன்தான்
 நீரை மட்டுமல்ல எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து அடக்குபவன். எல்லோரையும் அடக்கி ஆள நினைக்கும் நீங்கள்தான் அகம்பாவம் பிடித்தவர்கள் என்றது. அமைதியாக நான் தலை கவிழ்ந்து கொண்டேன்.

ஞாயிறு, நவம்பர் 9

பந்தக்கால்

                 

                      விளையாட்டும் பேச்சுமாய் கலவையினூடாக கீழே கிடக்கிற செய்தித்தாள் கிழித்துப்போடப்பட்ட வாராந்திர, மாதந்திரிகளின் பக்கங்களை சேகரித்தெடுத்து அவைகளில் சிலவற்றை எனது சட்டைப்பையிலும் புத்தகப்பையிலுமாய் வைத்து பாதுகாத்த பழக்கத்தின் நீட்சியே என்னை ஓரளவு இலக்கியம் படிக்க வைத்தது எனலாம்... அப்படியான நாட்களின் நகர்வுகளில் உருவான வாசிப்புப்பழக்கம் இயக்கமும் என்னை கைப்பிடித்து இழுத்துக் கொண்டுபோய் இலக்கியத்தில் அனா, ஆவன்னா  எழுத வைத்தது என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் விமலனை அநேகமாய் பதிவுலகில் நிறையப்பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு.

                 அவர் எழுதிய பந்தக்கால் என்னும் புத்தகத்தை சமீபத்தில் வாசித்தேன். தொகுப்பில் மொத்தம் இருபத்திரெண்டு கதைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். இந்நூலினை “என்னை  சற்றே ஆழமாக இம்மண்ணில் பதியனிட்ட எனது பெற்றோர்களுக்கு” என அழகாக சமர்ப்பித்துள்ளார்.இந்நூலினை சரவணா பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர். எளிமையான வடிவமைப்பில் அழகாக உள்ளது.



                         பாலம் எனும் சிறுகதையில் வர்ணனை அருமை. ஒரு சின்ன நிகழ்வை அழகான கதையாக வடிவமைத்துள்ளார். வானத்திற்கும் பூமிக்கும் நட்டு வைத்த வெள்ளிக்கம்பிகளாய் இறங்கிக்கொண்டிருந்தது மழை.அடித்த காற்று மொத்த மழையையும் இங்கிட்டும் அங்கிட்டுமாய் தாலாட்டிக் கொண்டிருந்தது. என்று அழகான வர்ணனையுடன் ஆரம்பித்து விளாரான ரத்தக்காயங்களுடன் படுத்துக்கிடக்கிறது என்று பாலத்தின் மோசமான இயல்பையும் ரசிக்கும்படி எழுதியுள்ளார். கதையின் முடிவில் ஒரு சின்ன நிகழ்வை கோடிட்டு காட்டி கதையை முடித்துள்ளார். அதுவும் நெஞ்சைத்தொடும்படி..

                   பதியம் எனும் கதையில் மரக்கன்றுகள் நடுதல், மீதமான மரக்கன்றை யாருக்கு கொடுப்பது என்ற குழப்பம், “பெரும்பாலும் செடிகளையும், மரக்கன்றுகளையும் பார்த்தே பேசினாள்..” என்று மரக்கன்று வாங்கும்போது நர்சரிப்பெண்ணின் இயல்பு என்று கலந்து கட்டுகிறார். 

                                குருத்து எனும் கதையில் மருத்துவமனைகளில் மனிதர்களை நடத்தும்விதம் அதுவும் அவர்களின் பிரத்தியோக பாஷையான ’கேஸ்’ என்ற வார்த்தையின் வலியை சொல்லியுள்ளார். ஒரு பெண் குழந்தை பெத்துக்கனும் எனும் முடிவு வெகு அழகு.

                            பன்றிகள் மேயும் பெருவெளியில் ஒரு பன்றிக்குட்டி அது வாழும் இடம் அதனால் எரிச்சலுறும் ஒரு மனிதமனம் என கதை நகழ்கிறது. முடிவில் அடிபட்டுக்கிடக்கும் பன்றிக்குட்டியை நாயை விரட்டியதின்மூலம் காப்பாற்றப்பட்டதாய் நினைக்கும் மனித மனத்தை என்னவென்று சொல்வது.

                  எனது மனதை பாதித்த கதைகளில் ‘சாயங்களில்..!’ எனும் ஒரு கதை. தவசிலிங்கத்தின் கதாபாத்திரத்தை நம்மோடு அழகாக அழைத்துச்சென்று அவர்மீது ஒரு பரிதாபத்தையும் உண்டாக்குகிறார். பெரும்பாலும் இவரின் கதைகளில் அது ஒரு நிகழ்வாகவே பதியப்பட்டிருக்கும். வாசிக்கும்போது கதாபாத்திரங்களினூடே நாமும் பயணிக்கலாம். ஐந்து பைசாவுக்கு கை நிறைய அள்ளித்தரும் பெட்டிக்கடை தவசிலிங்கம் இறுதியில்கால் ரூபாய் பிச்சை எடுப்பது நெஞ்சை அழுத்தும்.

                        சைக்கிள்காரக்கா கதாப்பாத்திரத்தின் மன உறுதியை ‘ஒற்றைச்சிறகு எனும் கதையில் காணலாம். இன்றும் பல பெண்கள் அந்த மன உறுதியுடன்தான் வாழ்க்கையை வாழ்கின்றனர்.

                பந்தக்காலு எனும் கதையில் ‘நாம ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டு கண்ணுமணிகளா ரெண்டு பையங்களை பெத்தெடுத்து இந்த ஊரையே என்னன்னு கேக்கனும்’ என்ற வார்த்தை ஏனோ நண்பா! அந்தப்பெண்ணை பார்த்ததும் மின்வெட்டாய் இந்த வார்த்தைகள் வந்து போனது எனக்குள் என்று  நண்பனிடம் கூறுவது உணர்ச்சிபூர்வமாக இருக்கும். 

                   பசி என்ற கதை படிப்பதற்கு சற்று அயர்வைத் தந்தது. பெரிய பத்தியாக இருந்ததே காரணம் என நினைக்கிறேன். ஆனால் கதையும் கதையின் முடிவும் வெகு அழகு. இவருக்குப்பிடித்தமான டீக்கடையின் வர்ணனை இந்த நூலில் அவ்வளவாக இல்லை. எல்லா கதைகளைப்பற்றியும் எழுத ஆசைதான். எனக்குப்பிடித்த பல கதைகளை எழுதிவிட்டேன். மற்ற கதைகளை மற்றவர்களும் படிக்கட்டும் என்று விட்டுவிட்டேன். விமலனைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள பூப்பதெல்லாம்... என்ற என் பழைய பதிவைக்காணலாம். விமலன் அவர்களின் சிட்டுக்குருவி என்னும் தளத்தில் அவரின் எழுத்துக்களை வாசிக்கலாம்.