புதன், டிசம்பர் 27

கவிதை என்ற பெயரில் கிறுக்கியவை

நைஸ்
அழகு
செம
வாவ்
சூப்பர்
அருமை
ம்ம்ம்...
இரு கொஞ்சம்
வார்த்தைகள் சேகரித்து வருகிறேன்..!

------------------------------------------------------------------------------
இரண்டு சொட்டு
கரெண்ட்
உன் கண்கள்..!

------------------------------------------------------------------------------
அதிகாலை உன்
அழகைப் பார்த்து
சூடாகிக்கிடக்குது மார்கழி!

-----------------------------------------------------------------------------
சென்னை சில்க்ஸ்
போத்தீஸ்
சரவணா ஸ்டோர்
ஜெயச்சந்திரன் சில்க்ஸ்
இன்னும்... 
எத்தனையோ கடைகளின்
தாவணிகள் ஏங்குகின்றன
நீ கட்டுவதற்கு
கடைசியில்
நான் எடுத்து தந்த
தாவணி கட்டிக்கொண்டது
உன்னை..!

--------------------------------------------------------------------------------
உனது வாசித்தலுக்காக
காத்திருக்கும் எனது
கவிதைகள்
நீ வாசித்துப்பார்
உனக்கே தெரியாத
உன்னை அறிமுகம்
செய்திருப்பேன்..!

-----------------------------------------------------------------------------------
உன்னை எப்படித்தான்
பார்க்கனும் கொஞ்சம் சொல்லு
எங்கோ பார்த்து பேசினால்
நேரே பார்த்து பேச
பயமா என்கிறாய்
கண் பார்த்து பேசினால்
ஏன் குறுகுறுனு
பார்க்க என்கிறாய்
கொஞ்சம் பார்வையை
கீழிறக்கினால்
ச்சீய் என்கிறாய்
கொஞ்சம் தலைசாய்த்து
பார்த்தால் முந்தானையை
சரிசெய்கிறாய்
எப்படித்தான் பார்க்கனும்
கொஞ்சம் சொல்லு..!

--------------------------------------------------------------------------------------
மழைக்கவிதை
எழுத நேரமேது
மழையும் அவளும்
உடனிருக்கும்போது..!

--------------------------------------------------------------------------------------
இந்நேரம்
முடிவுசெய்திருப்பாய்
அடிக்கலாமா
உதைக்கலாமா
இல்லை...
அணைக்கலாமா என
எதுவாயினும்
உன் உதட்டால் செய்..!

---------------------------------------------------------------------------------
நீ என்னை
முறைத்துக்கொண்டே
கடக்கும்போது
உன் ஆடை மட்டும்
என்னை உரசிப்போகிறது..!

------------------------------------------------------------------------------------
கவிதைக்கு பொய்யழகு
என் கவிதைக்கு
உன் 'மெய்'தான் அழகு!

--------------------------------------------------------------------------------------
டேய்.. என்னடா
வரவர கலராயிட்டே போற
என்ற உன் கேள்விக்கு
தினமும் கனவில்
உரசுவது உன்னைத்தானே
என்று எப்படி சொல்வேன்..!

--------------------------------------------------------------------------------------
தூக்கிச்சொருகுன வெள்ளச்சேலை
கருத்த உடம்பில்
ஓடும் வியர்வை
ஆளுசர புல்லுக்கட்டை
அசராமா தூக்கிட்டு வரும்
என் அப்பத்தா கால்தடம்
படாத இடமில்லை
இந்த பனங்காட்டில்
பனஒலைகளை பக்குவமாய்
வெட்டி பொங்கல் வைப்ப
பனங்கிழங்கு வேகும் வாசனை
பக்கத்து தெருவுக்கும் மணக்கும்
சாயங்கால வேர்வையை
பனைவிசிறியை வைத்து விரட்டுவ
உன்மடி படுத்து ஓசியில
காத்து வாங்குவேன்
குருத்தோலையில் கொழுக்கட்டை
நீ அவிச்சா நம்ம ஊர்
சாமியும் வீடு தேடி வரும்
பனைமட்டையில் நீ செஞ்ச
வண்டி பஞ்சரில்லாம ஓடும்
நீ உடச்சு கொடுக்கும்
கருப்பட்டியின் தித்திப்பு இன்னும்
என் நாக்கில் நிக்குது
நீ என்னைவிட்டு போன
நாளுல பனங்காட்டுல
ஒத்தையாய் நானழுதேன்
பனமரமும் சேர்ந்தழுதுச்சு
இப்போ பனையுமில்லா
நீ நடந்த பாதையுமில்ல
நீ செஞ்ச பனவிசிறியில
காத்து வாங்கிட்டே
பழங்கதையை நினச்சு பாக்கேன்..!

-----------------------------------------------------------------------------------------

வெள்ளி, மார்ச் 24

கடவுள் இருக்கான் குமாரு

                    சாலையோரம் சோலை ஒன்று வாடும்.. சங்கீதம் பாடும்.. பாடல் வரிகளை பாடிக்கொண்டே சாலையில் ஒரு மாலை நேரம் நடந்து சென்றேன். மக்கள் வேகமாக காரிலும், பைக்கிலும் எங்கோ விரைந்து செல்கின்றனர். நான் மட்டுமே இந்த உலகத்தில் வேலை இல்லாதவன்போல உணர்ந்தேன். வேலை இல்லாததன் கொடுமை என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும் என நினைக்கிறேன். அப்பாவிடம் தினச்செலவுக்கு காசுவாங்கக்கூட கை கூசுகிறது. கல்யாணம் செய்து கொள் என்று வீட்டில் வற்புறுத்துகின்றனர். மனைவிக்கு மல்லிகைப்பூ வாங்குவதற்குகூட என் அப்பாவிடம்தான் காசு வாங்க வேண்டும். என்ன கொடுமை சரவணா!! என என்னை நானே நொந்துகொண்டு மறுபக்கம் அழகான பெண்களை மட்டுமல்ல அனைத்து பெண்களையும் ரசித்துகொண்டு மனதில் உற்சாக ஊற்று பீறிட நடப்பது எனக்கு மட்டுமே வாய்த்தது. இந்த நேரத்தில் எனக்கு அவசர தேவை ஐம்பதாயிரம் ரூபாய். ஏதாவது ஒரு சிறு தொழில் ஆரம்பித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது.
     
            அப்போது  சற்றும் எதிர்பாராமல் ஒரு காரும் பைக்கும் மோதிக்கொண்டது. பைக்கில் கணவன், மனைவி, ஒரு சிறு குழந்தை இருந்தனர். பைக் கீழே வழுக்கி ரோட்டில் சரசரவென்று ஓடியது. கார் டிரைவர் சட்டென்று காரை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான். கணவனுக்கு காலில் பயங்கர அடி. மனைவி ஒரு பக்கம் விழுந்து கிடந்தாள். நல்லவேளையாக குழந்தைக்கு எந்த அடியும் படவில்லை. அதிர்ச்சியில் குழந்தை சத்தம்போட்டு அழுதது. மனைவி கத்தினாள், கணவன் மயங்கி கிடந்தான். நாட்டில் நிறைய நல்லவர்கள் உள்ளனர், உடனே ஆம்புலன்சுக்கு போன் பண்ணி வரவழைத்து அனுப்பி வைத்தனர். மனைவி அழுதுகொண்டே குழந்தையை தூக்கிக்கொண்டு கணவனுடன் ஆம்புலன்சில் சென்றாள். 
      
                சத்தியமாக சொல்கிறேன்  நானும் அவர்களுக்கு ஆம்புலன்சில் ஏற்றிவிடும்வரை உதவி செய்தேன். பைக்கின் அருகில் சென்று பார்த்தேன். பளபளவென்று மின்னியபடி தங்கச்செயின் என்னைப்பார்த்து பல்லிளித்தது. அவள் அணிந்து வந்ததாகத்தான் இருக்கும். யாரும் என்னை கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு செயினை எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டேன். சற்று தூரம் சென்று செயினை எடுத்துப்பார்த்தேன். கண்டிப்பாக பத்து பவுன் தேறும். கடவுள் இருக்கான் குமாரு என்று மனசுக்குள் ஒளிந்திருக்கும் சாத்தான் சொல்லியது.
   
                       அதே உற்சாகத்துடன் சாலையில் நடந்து சென்றேன். உற்சாகம் குறைந்து மனசுக்குள் குழப்பம் ஓடியது. அடிபட்ட அவனின் மனைவியின் முகம் வந்தது. அவனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலையும் மனதில் தோன்றியது. மருத்துவச்செலவுக்கு என்ன செய்வாளோ என்றபடியே யோசனையுடன் சென்றேன். இப்போது மனசுக்குள் இருக்கும் கடவுள் செயினை உடனே சென்று அவளிடம் ஒப்படத்துவிடு என்றார்.  
         
                சாத்தான் மறுபடியும் சிரித்துக்கொண்டே அருமையான வாய்ப்பை நழுவவிடாதே என்றான். குழப்பம் அதிகமானது. இந்த குழப்பத்தில் என்னை அறியாமல் எதிரே வரும் பைக்கில் உரசிக்கொண்டேன். ஐம்பத்தைந்து வயதைத் தொட்ட அந்த மனிதர் ”சாரி தம்பி”,  தப்பு என்மேலதான், பதட்டத்தில் போறதால கவனிக்கல என்று மன்னிப்பு கேட்டார். பரவாயில்ல சார், எனக்கு ஒன்னும் ஆகல என்றேன். மறுபடியும் அவர் என் மருமகனும் மகளும் பைக்கில் செல்லும்போது ஆக்ஸிடன்ட் ஆயிருச்சு. என்னாச்சோ! ஏதாச்சோனு பதட்டத்துல ஹாஸ்பிட்டல் போறதால கவனிக்கலை, மன்னிச்சிருங்க தம்பி என்றார். எந்த ஹாஸ்பிட்டல் என்றேன். தெரியல தம்பி, இப்போதான் நண்பர் ஒருத்தர் சொன்னார். ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு போனாங்க என்றார். உடனே நான் எனக்கு தெரியும் சார். நானும் கூடவே வருகிறேன் என்று அவருடன் பைக்கில் சென்றேன்.
               
                         மருத்துவமனையில் அவரின் மகள் ஓ!வென்று அழுதாள். என்னவென்று மருத்துவரிடம் சென்று விசாரித்தேன். பயப்படும்படி ஒன்றுமில்லை. காலில் சின்ன பிராக்சர்,, சின்ன ஆப்பிரேசன் செய்தால் சரியாகிவிடும், வேறெதுவும் பிரச்சனை இல்லை என்றார். நேராக அந்த பெண்ணிடம் சென்றேன். பயப்படாதீங்க சிஸ்டர், ஒன்னும் ஆகாது...  நீங்க இந்த செயினை தவற விட்டுட்டீங்க, அதான் கொடுத்துவிட்டு போகலாம்னு வந்தேன் என்றேன். நன்றியுடன் அந்த பெண்மணி என்னை வணங்கினாள். கடவுள் இருக்கான் குமாரு என்று மனசுக்குள் இருக்கும் கடவுளே இப்போது சொன்னார்.  சந்தோசமாக வீடு வந்து சேர்ந்தேன்.

TET Study Material

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு தயார் செய்யும் பொருட்டு உங்களுக்கு தேவையான study material நிறைய தளங்கள் வழங்குகின்றன. அவற்றுள்     சிலவற்றை தொகுத்து தருகிறோம். இவற்றினை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்கு கிளிக் செய்தால்  அனைத்து பாடத்திற்கும் தேவையான மெட்டீரியல் கிடைக்கும். நன்றி : TRB TNPSC தளம்.
இங்கு கிளிக் செய்தால் கல்விச்சோலை  வழங்கும் அனைத்து பாடத்திற்கும் உரிய தகவல்கள் கிடைக்கும்.
இங்கே கிளிக் செய்தால் ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் பாடத்திற்குரிய மெட்டீரியல் கிடைக்கும்.
இங்கு கிளிக் செய்தால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான மெட்டீரியல் கிடைக்கும்.
இந்த தளத்திலும் நாளிதழ்களில் வரும் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தகவல்கள், வினாக்கள், மாதிரி வினாக்கள்  Study Materials  அனைத்தும் கிடைக்கும்.
மேலும் தமிழ்
ஒவ்வொரு தலைப்பிலும் நீங்கள் கிளிக் செய்தால் அந்த தளத்திற்குள் செல்வீர்கள். உங்களுக்கு தேவையான பாடத்தினை டவுன்லோட் செய்து பயன்படுத்திக்கொள்ளவும். என்னாலான சிறுமுயற்சி இத்தொகுப்பு ஆகும். உங்கள் ஆதரவு மற்றும் கருத்துக்களை தெரிவியுங்கள்.  தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். நன்றி.