ஞாயிறு, மார்ச் 22

சாணிவண்டு

               சாணி வண்டு ஏன் இவ்வளவு பலம் பொருந்தியதாக உள்ளது என பட்டோங்கோ இன மக்கள் கூறும் கதை இது. கதை சொல்லி நிக் கிரீவ்ஸ் எழுதிய சிங்கம் பறந்தபோது என்ற நூலில் இருந்து...


            முன்னொரு காலத்தில் சாணி வண்டும் வண்ணத்துப்பூச்சியும் சிறந்த நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகவே சென்றனர். ஒருநாள் மரத்தடியில் இளைப்பாறிக் கொண்டிருந்தபோது இவற்றை முதல் மனிதனும், முதல் பெண்ணும் பார்த்தார்கள்.
          “என்ன அழகிய வண்ணத்துப்பூச்சி!” என்று வியந்தனர். சற்று நேரம் அங்கேயே நின்று அதன் அழகை ரசித்தனர். அவர்கள் போனதும் சாணி வண்டு, வண்ணத்துப்பூச்சியிடம், “ எப்போது இவர்கள் உன்னைப் பார்த்தாலும் நின்று ரசிக்கின்றனர். என்னைப்பார்ப்பதே கிடையாது. அவ்வளவு அசிங்கமா நான்?” என்று கேட்டது.
         வண்ணத்துப்பூச்சி, “சீச்சி! அப்படியில்லை. அவர்களைக்கவரும் எதுவும் உன்னிடமில்லை! அவ்வளவுதான்! மனிதர்கள் அழகையும், பலத்தையும் ரசிப்பர். நீ பலமுள்ள பூச்சியாக மாறினால் உன்னையும் கண்டு ரசிப்பார்” என்றது.
          சாணி வண்டு வருத்தத்துடன், “நான் ஒருபோதும் பலசாலியான பூச்சியாக மாறமாட்டேன்” என்றது.
           வண்ணத்துப்பூச்சி, “ நிச்சயம் நீ பலசாலியாக ஆவாய்! ஒன்றை மட்டும் நினைவில் கொள்! முயற்சி செய்யாமல் எந்தப்பலனும் கிடைக்காது. முயற்சி செய் பலன் கட்டாயம் கிடைக்கும்!” என்றது. சாணிவண்டும் முயற்சி செய்ய முடிவெடுத்தது.
              உடற்பயிற்சி செய்து உடலைப்பலமாக்க முயற்சித்தது. விடாமல் முயற்சி செய்ததன் பலனாக பலமான பூச்சியானது. தன் நண்பன் வண்ணத்துப் பூச்சியிடம் திரும்ப வந்தது. தன் பலத்தைக்காட்ட தன்னைவிட பல மடங்கு பெரியதான் உருண்டைகளாக யானைச்சாணத்தை உருட்டிக்காட்டியது. பின்னாங்கால்களாலேயே அவற்றை நகர்த்திச் சென்றது.
            சாணிவண்டு இவ்வாறு செய்து காட்டியபோது அந்தப்பக்கமாக முதல் மனிதனும், முதல் பெண்ணும் அங்கே வந்தனர். சாணிவண்டின் பலத்தைப்பார்த்து வியந்தனர். அருகிலிருந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கவே இல்லை. சாணி வண்டுக்கு ஒரே மகிழ்ச்சி. அன்று முதல் சாணத்தை உருட்டி வருகிறது.
             சாணிவண்டு தன் பலத்தை பறைசாற்ற இப்படிச் செய்வதில்லை. தன் முட்டைகளை இந்த சாணி உருண்டைகளில் மறைத்து வைத்து தன் எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்கிறது.

கூடுதல் தகவல் : சாணிவண்டின் அறிவியல் பெயர் பேக்கிலோமெரா பெமொராலிங். இது குழுவாகவே இருந்து உண்ணும். இதன் ஆயுட்காலம் 2 வருடங்கள். அடைகாக்கும் பருவம் 1 வாரம். இவற்றில் 750 வகைகள் உண்டு. ஆப்பிரிக்காவில் இவை பரவிக் காணப்படுகின்றன.இதற்கு மோப்ப சக்தி அதிகம். ஆண் வண்டு “கல்யாணப்பந்து” தயாரித்து உருட்டும். அப்போது பெண் கவரப்படும். இனச்சேர்க்கை முடிந்தவுடன் கல்யாணப்பந்தை சாப்பிட்டுவிடும். தேன்நிலவு முடிந்தவுடன் இரண்டு வண்டுகளும் சேர்ந்து ஒரு சாணப்பந்து தயாரித்து அதை புதைத்து அதில் ஒரே ஒரு நீள்வட்ட வெள்ளை முட்டை இடும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் லார்வா பியூப்பாவாக மாறி சாணிவண்டாக மாறிவிடும். கீரியும் புனுகுப்பூனையும் இந்த லார்வாக்களை தேடித்திரிந்து உண்ணும்.
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா

சனி, மார்ச் 21

காக்காச்சோறு

           விமலனின் காக்காச்சோறு தலைப்பு என்னைக் கவர்ந்தது. இந்த தலைப்பைக் கேள்விப்பட்டவுடன் கவிஞர்  அப்துல் ரகுமானின் காக்கைச்சோறு எனும் கவிதை நூல்தான் எனக்கு ஞாபகம் வந்தது. காக்கைகள் நாம் உணவு வைத்தவுடன் கூட்டமாக வந்து தன் உணவைப்பகிர்ந்து கொள்ளும் என்றுதான் நாம் நினைக்கிறோம். அதில் விஷம் வைத்திருக்கலாம் என்ற எண்ணத்தில் காக்கைகள் தன் இனத்தைக் கூப்பிட்டு சோதித்துப்பார்க்கும் என்று கவிதை நடையில் நாம் யோசிக்காத தெரிந்திருக்காத வகையில் அப்துல் ரகுமான் புது விளக்கம் தந்திருப்பார்.

              விமலனின் காக்காச்சோறு நூலில் இடம்பெற்ற  அதே தலைப்பிலான கதையில் காக்காவிற்கு சோறு வைப்பதும் அது சினேகத்துடன் பழகுவதும் அழகான நடையில் எழுதியிருப்பார். கதையின் இடையில் அரிசி ரகங்களை சொல்லி அவர் அடிக்கும் கமெண்ட் அருமை. கதை முடிவில் அவர்கள் டவுனுக்கு போனதும் காட்சிகள் மாறி காக்கைகளுக்கு நேரும் கதியினை எழுதி முடித்திருப்பார்.

                 நீர்க்குமிழி எனும் சிறுகதையில் தாலி அறுத்தவளின் மனநிலையை அழகாக விவரித்திருப்பார். கிராமத்தில் இதுபோன்ற நிலைமை இன்னும் தொடரத்தான் செய்கிறது. ராமு அண்ணன், அவரின் பாட்டி போன்றோரின் உழைப்பினை கிராமத்துப்பாணியில் விமலன் அழகாகக் கூறியுள்ளார். முடிவில் “தாலி அறுத்தவ தலைவிதி அதுதான்” எனும்போது நெஞ்சு கனக்கிறது.

             இடக்கரடக்கல் எனும் கதையில் வனராஜன் எனும் பெயரை அறிமுகப்படுத்தும் பாங்கு அலாதியானது.

         வாய்க்கரிசி எனும் கதையில் ஒரு டெய்லரின் அன்றாட நடவடிக்கைகளை துல்லியமாக விவரித்திருப்பார். எங்கள் ஊரில் நான் பார்த்த ஒரு டெய்லரும் இதே பாணிதான். இந்தக்கதையில் வரும் டெய்லர் குடிகாரராக மாறவும் வீட்டின் நிலைமையே மாறுகிறது. தினமும் அவன் டீக்குடிக்கும் கடை, அங்கு டிபன் சாப்பிட அவன்படும்பாடு, ஒரு கட்டத்தில் அவனுக்கு டீ கொடுக்கக்கூடாது என முடிவெடுக்கும் முதலாளி , டெய்லரின் பிள்ளைகள் என கதையின் ஒவ்வொரு பாத்திரமும் கவனத்தை ஈர்க்கிறார்கள். இறுதியில் அவன் இறந்ததும் மனைவியும், பிள்ளைகளும் வாழ வேண்டிய வயது என முடித்திருப்பார்.

       வேனற்காடு எனும் கதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார் விமலன். நல்ல எழுத்து நடை. சந்தேகப்புத்தி எனும் விஷவிதை ஒட்டு ரகம், வீரிய வித்து, கலப்பின வித்து எதனிதனையும் தாண்டியதாக அவனுள் விழுந்து துளிர்விட்டிருந்தது எனும் அவரது நடை வாசிக்க சுகமானது.


                    காக்காச்சோறு நூலில் மொத்தம் பதினேழு கதைகள். ஒவ்வொரு கதையை பற்றியும் எழுத எனக்கு ஆசைதான். அது படிப்பவர்களுக்கு அயற்ச்சியைத் தரும். விமலனின் கதையில் நாம் அன்றாடம் பார்க்கும் காட்சிகள், டீக்கடை, உடன் பணியாற்றுபவரின் மனநிலை என ஒவ்வொன்றையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தி இருப்பார். இந்த நூலில் சில கதைகளின் தலைப்பு நமக்கு ஆச்சர்யமூட்டும். ஒத்தப்பனை, உப்பாங்காத்து, உள்கூடு, விருசல், இடக்கரடக்கல், சனாதனங்கள் எனப்பட்டியல் நீளும். வம்சி புக்ஸ் நிறுவனத்தார் விமலனின் காக்காச்சோறு சிறுகதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்கள்.