சனி, ஆகஸ்ட் 16

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு

               கருப்பு - நிறங்களின் இல்லாமை. இது ஒரு நிறமல்ல. வெளிச்சத்தின் முந்தைய நிலை. வெயிலின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கருப்பின் தாக்கம் அதிகம்தான். சிவப்பாக்கும் கிரீம்கள் அதிகம் விற்பதும் இந்தவகை நாடுகளில்தான். கோவில் சிலைகளின் வண்ணம்கூட கருமைதான். பார்ப்பதற்கு அழகு தருவதும் அதுதான். சிலைகளை கருப்பாக்கவே எண்ணெய் வழிபாடு. கரிய மேகமும் அழகுதான். துக்கம், மரணம் போன்றவற்றைக் குறிக்கவும் கருப்பு பயன்படுகிறது.

”கண்ணா கருமை நிறக்கண்ணா
உன்னைக்காணாத கண்ணில்லையே
உன்னை மறுப்பாரில்லை
கண்டு வெறுப்பாரில்லை...”

”கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..” போன்ற பல சினிமாப்பாடல்கள் கருப்பை புகழ்கின்றன.



            கிருஷ்ணா என்ற சொல்லுக்குகூட கருமை என்றுதான் அர்த்தமாம். கிருஷ்ண, ஷ்யாமள,நீளா எல்லாமே வடமொழியில் கருப்பு நிறத்தைத்தான் குறிக்கும். நீளம் என்பது வெளிச்சம் இல்லாத ஒரு நிலைதான். சூன்யம் என்றுகூடக்கொள்ளலாம். கடவுள்களில் காளியும் , காமாட்சியும் கூட கருப்புதான்.   நீதிமன்றங்களில் கருப்பு அங்கிதான் அணிகின்றனர். சிலர் கருப்பை வெறுக்கவும் செய்கின்றனர். நிறவெறிதான் இது. நிறத்தை வெறுத்தால் அவன் மனிதனே அல்ல. மனிதமனம் அத்துனை நிறத்தையும் ரசிக்கும் ஆற்றல் பெற்றது. ஒவ்வொரு சூழலுக்கு ஒவ்வொரு நிறம் அழகு. அயல் மகரந்தச்சேர்க்கை நூலில்  அப்துல் காதர் கருப்பு பற்றிய கவிதையில் அழகாக எழுதியுள்ளார்.

”ஏசுவே!
மீண்டும் நீ
பிறந்து வருவாய் எனச்
சுருதி வேதங்கள்
உறுதி கூறுகின்றன.
மீண்டும் பிறந்தால்
கர்த்தரே!
கருப்புநிற ஏசுவாகப் பிறக்க வேண்டாம்!
ஏனெனில் உன்னையும் அவர்கள்
உள்ளே அனுமதிக்கப் போவதில்லை!”
--------------------------------------------------
பெண்ணே!
உன் முகம்
ரோஜாத்தோட்டம்தான்
இருந்தாலும்
அந்தக் கருப்பு மச்சம்
நீக்ரோ
தோட்டக்காரனைப்போல’


    நானும் கல்லூரிக்காலங்களில் எப்படியாவது சிவப்பாகவேண்டும் என்ற நம்பிக்கையில் அதிகம் உபயோகித்து எந்த பலனுமில்லால் பல கிரீம்களை ஒதுக்கிவிட்டேன். பணமும் நேரமும் செலவழிந்ததுதான் மிச்சம்.  இயற்கை தந்த கொடை கருப்பு. கருப்பு மச்சம் பிடிக்கிறது. உடம்பே மச்சமாயிருந்தால் பிடிக்காமலா போய்விடும்.ரோஜாவில்கூட கருப்பு ரோஜா என்கின்றனர். ஆனால் பார்த்ததில்லை. அதன்பின்பு கருப்புதான் எனக்கு பிடித்த நிறமானது. வேறுவழி? இரவும்கூட கருப்புதான். காதலியுடன் இருக்கும் நேரங்களில் கரிய இரவுதான் பிடிக்கிறது. என் காதலியுடன் அவ்வப்போது அருந்தும் கருப்பு தேநீர்கூட பிடித்தமான ஒன்று. அதன் சுவை மட்டுமல்ல. அதன் நிறமும்கூட.

கருப்பு
எனக்குப் பிடிக்காத ஒன்று
என் கருப்பு காதலியைத் தவிர!



        என்றேனும் கருப்பு வானவில் தோன்றுமா என்று மழை பெய்து ஓய்ந்த பொழுதுகளில் வானத்தை அண்ணாந்து பார்த்ததுண்டு.
கருப்பு வெறும் நிறம் மட்டுமல்ல. ஆண்டவன் கொடுத்த வரம்.
உழைப்பாளியின் கருப்பு நிறத்தை ரசிக்காமல் நாம் உணவு உண்டால் ஜீரணமாகாது.  கருப்பு தங்கம் என்கின்றனர். தங்கத்தில் கருப்பு உண்டா எனத்தெரியவில்லை. கருப்பு வைரம் உண்டு போல. யாரையும் எதிர்ப்பதற்கு கருப்பு கொடி காட்டுகின்றனர். அசம்பாவிதம் நடந்த நாட்களை கருப்பு தினம் என்கின்றனர். முடிகூட கருப்பாயிருப்பதற்கு எத்தனையோ மெனக்கிடல்கள். ஒரு நரை வந்தாலும் அலறியடிக்கிறோம். உயரமான சற்றே கருமை நிறமுடைய பெண்களின் அழகுக்கு ஈடே இல்லை. கொஞ்சம் கலரான பெண்கள்கூட கருப்பு நிற புடவையில் சற்று கூடுதல் அழகாகவே தெரிவார்கள். என் கண்களுக்கு மட்டுமா எனத்தெரியவில்லை.
    வேலை செய்து அலுத்துத் தூங்கும் வேலையில் அங்கு கருப்புதான் இருக்கிறது. அதுதான் நிம்மதியும் தருகிறது. கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு.