புதன், செப்டம்பர் 21

சாமியாருமா?

       ஒரு கோயில் மண்டபம். அங்கு,கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தார் சாமியார் ஒருவர்.நிறையப் பேர் உட்கார்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.
        இதை   மேலே  இருந்து    கவனித்துக்கொண்டு  இருந்தார் கடவுள்.   "இந்த மனிதர்கள் எப்பவும் நம்மைப் பற்றியே பேசுகிறார்களே!" என்று நினைக்கும்போது கடவுளுக்குப் பெருமையாக இருந்தது.
            'சரி, நேரில் போய் அவர்களைப் பார்த்துவிட்டு வரலாம்' என்று சாமியார் பேசிக்கொண்டு    இருந்த     கோயில்    மண்டபத்தின்   அருகே வந்து சேர்ந்தார். ஆலயத்தின் வெளியே இருந்த ஓர் அரச மரத்தின் அடியில் நின்றார்.

          அப்போது வெளியே வந்த பக்தர் ஒருவர், " வேஷப்பொருத்தம் பிரமாதமா இருக்கு!" என்றார் கடவுளைப் பார்த்து.
         கடவுளுக்குத் தூக்கிவாரிப் போட்டது." ஐயா! நான்தான் உண்மையான கடவுள்" என்றார்.
     "என்கிட்ட சொன்னதோட வச்சிக்க.  வேற யார்கிட்டையும் சொல்லிடாதே. பிறகு   உன்னை   பைத்தியக்கார   ஆஸ்பத்திரியில்    கொண்டுபோய் விட்டுடுவாங்க."
    " நான் சொல்றதைக் கொஞ்சம்..." - கடவுள் ஏதோ சொல்லத் துவங்குவதற்குள் அவரை இடைமறித்த பக்தர், " ஒண்ணும் சொல்ல வேணாம். முதல்ல இடத்தைக் காலி பண்ணு.கூட்டம் முடிஞ்சு, சாமியார் வெளியே வர்ற நேரம் இது. அதுக்குள்ளே போயிடு" என்று கூறி சென்றார்.
      வெளியே வந்த பக்தர்கள் எல்லாம் இவரைப் பார்த்துவிட்டு, சந்தேகத்தோடு விலகிப் போக ஆரம்பித்தார்கள்.
      சாமியார் வந்தார். பார்த்தார் " ஏம்பா, இப்படி இங்கே வந்து கலாட்டா பண்றே? பேசாம போயிடு."
      "என்னைப் பற்றி பிரசங்கம் பண்ற உனக்குமா என்னை அடையாளம் தெரியலே?"
        எதுவும்   அவர்கள்   காதில்   விழவில்லை.   கடைசியாக,   கடவுளை   ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டுப் போய்விட்டார்கள்.
    வேறு வழியில்லை. கடவுள், கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்து விட்டார்.
        நள்ளிரவு   நேரம்.   கதவைத்   திறந்து    கொண்டு   மெள்ள  உள்ளே  வந்தார் சாமியார். " கடவுளே! என்னை மன்னிச்சுக்குங்க. நீங்கதான் கடவுள்னு எனக்கு அப்பவே தெரியும் ."
       "அப்புறம் என்ன? அந்த ஜனங்கள்கிட்ட அதைச் சொல்ல வேண்டியதுதானே!"
"சொல்லி  இருந்தா,   என்னையும்   பைத்தியம்னு   சொல்லி   உள்ளே   தள்ளி இருப்பாங்க."
          கடவுள் சிந்திக்க ஆரம்பித்தார்.
       ' இந்த மனிதர்களுக்கு,  இருக்கிற கடவுளைக் காட்டிலும் இல்லாத கடவுள் மீதுதான் அதிக நம்பிக்கை இருக்கிறது' என்று மனதுக்குள் எண்ணியவர் அங்கிருந்து மறைந்து போனார்.
                                                                        -தென்கச்சி கோ. சுவாமிநாதன்

4 கருத்துகள்:

  1. கடவுள் சிந்திக்க ஆரம்பித்தார்.//


    அருமையான பகிர்வு.. நன்றி...



    ஆங்கிலத்தை இப்படி கூட கத்துக்கலாமா ?

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதை.தொடர்ந்து எழுதுங்கள்.ஊக்கமளிக்க நாங்கள் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி..வேடந்தாங்கல்-கருன் மற்றும் R.Elan அவர்களுக்கு...

    பதிலளிநீக்கு
  4. சூப்பர் கதை.பாராட்டுகள்......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    பதிலளிநீக்கு