புதன், அக்டோபர் 12

சந்தேக மனைவி!!!

              கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் சந்தேகப்படுவது   இயல்பு.  சொல்லப்போனால் அது அளவுக்கு   மிகுதியான   அன்பின்   வெளிப்பாடு எனலாம். ஆனால் அதுவே அளவுக்கு மீறினால் பிரச்சனைதான். இப்படித்தான்  ஒரு ஊரில் (பின்ன என்ன காட்டிலா?)  கணவனும்,  மனைவியும் இருந்தார்கள்.
சந்தோஷமாகத்தான்!! ஆனால் மனைவிக்கு கணவன் மீது எப்பவும்,எது செய்தாலும் சந்தேகம்தான். என்ன சொன்னாலும் ,யார் சொன்னாலும் கேட்கவேமாட்டாள். அவனும் உத்தமனாகத்தான் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, வேலில போற ஓணான........விட்ட மாதிரி. அவனுக்கு நேரமே சரியில்ல  (முகவூர் ஜோசியக்காரரும் பரிகாரம் செய்யச்சொல்லி...செஞ்சும் பார்த்தாச்சு).  ஒருநாள் ஆபிஸிலிருந்து வீட்டுக்கு கொஞ்சம் லேட்டாக வந்தான். வீட்டுக்கு வந்தவுடன் சட்டையைக் கழட்டி போட்டுவிட்டு குளிக்க போய் விட்டான்.   அவன் மனைவி சட்டையை மெதுவாக ஆராய்ந்தாள் (புலனாய்வுத்துறை அன்பர்கள் இதைக் கொஞ்சம் குறித்துக் கொள்ளவும்). ஒரு நீளமான கருப்புத் தலைமுடி...மவனே இன்னைக்கு சிக்கிட்டான். குளித்து முடித்து வந்தவுடன் திருவிளையாடல் புராணம் ஆரம்பமானது. இன்னைக்கு எந்த குமரிப்பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க? என்று ஆரம்பித்து...இரவு சன் டிவியில் இதயம் முடியும் வரை இதயமே இல்லாமல் திட்டிவிட்டு தூங்கிப்போனாள். அப்போதானே காலையில சீக்கிரமா எந்திரிச்சு சண்டையை மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்க முடியும். மறுநாளாவது நம்ம ஆள் சுதாரித்து இருந்திருக்கலாம். முகவூர் ஜோசியக்காராருதான் சொல்லிட்டாரே..உனக்கு நேரமே சரியில்லனு!. மறுநாள் சட்டையை ஆராய்ந்ததில் அவளுக்கு சிக்கியது கொஞ்சம் நரைத்த முடி. இன்னைக்கு எந்த கிழவியோட ஊர் சுத்திட்டு வந்தீங்க...? இன்னைக்கு நிஜம் முடியும் வரை நிஜம் என்னவென்று தெரியாமல் சண்டை நீடித்தது (மனதுக்குள்ளேயே.... பஸ்ல வர்ற பொண்ணுங்க தலைய விரிச்சுப் போட்டு பந்தாவா வந்திர்ராங்க... நல்ல இறுக்கி சடை போட்டுட்டு வந்தா இங்க மாட்டியிருக்க மாட்டோம் . நம்ம கஷ்டம் யாருக்கு புரியுது என்று புலம்பிக்கொண்டான் ). அடுத்த நாள் நம்ம ஆளுக்கு கொஞ்சம் புத்தி வேலை செய்தது.  இன்று  வீட்டுக்கு  வெளியே  நின்னு சட்டையை கழட்டி நல்லா உதறிவிட்டு சிங்க நடை போட்டுக்கொண்டு வந்தான்.  இன்று அவன்  சட்டையை கழட்டிப்போடும் முன்னே புலனாய்வு தொடங்கியது.  ஒன்றும் சிக்கவில்லை... அப்பாடா தப்பித்தோம்!! என்று அவன் நினைப்பதற்கும், அவள் சண்டையை ஆரம்பிப்பதற்கும் சரியாக இருந்தது. இன்னைக்கு எந்த மொட்டை போட்ட பொண்ணோட ஊர் சுத்திட்டு வந்தீங்க? 

அட போங்கப்பா!! நீங்களும் உங்க சந்தேகமும்.....!!!  

5 கருத்துகள்:

  1. எப்பிடி சொன்னாலும் புரிஞ்சிக்கிடாதவங்களுக்கு என்னான்னு சொல்லுறது !!?

    பதிலளிநீக்கு
  2. அதீத அன்பு என்பதெல்லாம் புடலங்காய்... உண்மையான அன்பு முழு நம்பிக்கை வைக்கும்... இது வாழ்வாதார பிரச்சினை... அது தான் சந்தேகமாய் வளர்கிறது... செய்றதையும் செஞ்சுட்டு அதீத அன்பு வெங்காய அன்புன்னு சொல்லிக்கிட்டு.. விச்சு நம்பாதீங்க...

    பதிலளிநீக்கு
  3. வானவில் ஜீவா20 ஆகஸ்ட், 2012

    அருமை விச்சு அண்ணா.

    பதிலளிநீக்கு